நாகப்பட்டினம், நவ. 04- இந்திய எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடுமீனவர்கள் 31 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களை மீட்கக் கோரி ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மீனவர்கள் கைது
நாகை மாவட்டம் அக்கரைப் பேட்டை, நம்பியார் நகர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் 31 மீனவர்கள் அக்.31ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
நேற்று முன்தினம் இரவு (2.11.2025) இந்திய எல்லை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை சுற்றிவளைத்து, இலங்கை எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்ததாகக் கூறி, 31 மீனவர்களையும் கைது செய்தனர். 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (3.11.2025) கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
விடுவிக்க நடவடிக்கை
நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 31 மீனவர்களையும், அவர்களது 3 இயந்திரமயமாக்கப்பட்ட படகுகளையும் சிறைபிடித்துள்ள இலங்கை கடற்படையினர், அதே நாளில், மற்றொரு சம்பவத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்களையும், அவர்களது நாட்டுப் படகையும் சிறைபிடித்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, 114 மீனவர்களும், 247 படகுகளும் இலங்கை வசம் இருக்கிறது. எனவே, இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ்நாடு மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவிக்க உடனடியாக தூதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
