சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தீர்ப்பு
புத்புதாரா, நவ. 2- தந்தை 1956ம் ஆண்டுக்கு முன் இறந்திருந்தால், திருமணமான மகளுக்கு அவரது பூர்வீகச் சொத்தில் பங்கில்லை என சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சத்தீஸ்கர், சர்குஜா மாவட்டம், புத்பு தாரா கிராமத்தைச் சேர்ந்த ரக்மணியா என்ற திருமணமான பெண், தந்தையின் நான்கு ஏக்கர் பூர்வீக நிலத்தில் தனக்கும் பங்கு வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த நிலம் தந்தை சுதின்ராம் மற்றும் அவரது சகோதரர் புதாவுக்கு சொந்தமானது என அவர் வாதிட்டார். ஆனால் அவரது சகோதரர் பெய்கதாஸ், அந்த நிலத்தின் உரிமையை தனது மகள் ஜக்மத் பெயரில் மாற்றி பதிவு செய்திருந்தார்.
இதனை எதிர்த்து ரக்மணியா வழக்கு தொடர்ந்த போது, தாலுகா அலுவலரும், அதன் பின்னர் மாவட்ட நீதிமன்றமும், “சுதின்ராம் 1950-1951இல் இறந்ததால், இந்த வழக்கு 1956 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்து பரம்பரைச் சட்டத்துக்கு உட்பட்டது அல்ல” என தீர்மானித்தன. இதை எதிர்த்து ரக் மணியா மேன்முறையீடு செய்தார்.
இதை விசாரித்த சத்தீஸ்கர் உயர்நீதி மன்றம், “சுதின்ராம் 1956க்கு முன்பே இறந்ததால், அவருடைய சொத்து மீதான பரம்பரை உரிமை ‘மிதாக்ஷரா’ இந்து சட்டப்படி அமையும். அந்தச் சட்டத்தின் படி, தந்தை இறந்தபோது மகன் உயிருடன் இருந்தால், மகளுக்கு பங்கு கிடையாது. மகள் அல்லது மனைவிக்கு உரிமை கிடைப்பது மகன் இல்லாத போது மட்டுமே” எனக் குறிப்பிட்டது. நீதிமன்றம் மேலும், “1929ஆம் ஆண் டில் இயற்றப்பட்ட இந்து பரம்பரைச் சட்டத் திருத்தம், மகனின் முழு உரிமையை பாதிப்பதில்லை; அது வெறும் பெண் வாரிசுகளுக்கான உரிமை வட்டத்தை விரிவுபடுத்தியது மட்டுமே” எனவும் தெரிவித்தது. இதனால், வழக்கில் மனுதாரரான ரக்மணியாவுக்கு சொத்து உரிமை இல்லை என தீர்மானித்து, நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.
தீர்ப்பின் முக்கியப் பொருள்: தந்தை 1956-க்கு முன் இறந்தால், அந்தச் சொத்து மீதான உரிமை ‘மிதாக்ஷரா’ சட்டத்தின் கீழ் மகனுக்கே முழுமையாக செல்லும்; திருமணமான மகளுக்கு பங்கில்லை.
