சான்பிரான்சிஸ்கோ,நவ.2– இதய சிகிச்சை வல்லுநர்களின் உலகளாவிய மாநாடு அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நேற்று முன்தினம் (31.10.2025) முடிவடைந்தது.
இதில் டில்லி பத்ரா மருத்துவ மனை டீனும், இதய சிகிச்சை வல்லுநருமான மருத்துவர் உபேந்திர கவுல், டுக்ஸ்டோ-2 என்ற பெயரில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளை தாக்கல் செய்தார். இந்தப் பரிசோதனை மருத்துவர் கவுல் தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத் தலைவராக பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவர் பால், திட்ட இயக்குநராக மருததுவர் பிரியதர்ஷினியும் பணியாற்றினர்.
இந்த பரிசோதனையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய தலைமுறை இதய ஸ்டென்ட் ‘சுப்ராப்ளக்ஸ் க்ரஸ்’ மற்றும் பன்னாட்டு சந்தையில் கிடைக்கும் அமெரிக்கத் தயாரிப்பு ‘ஜீயன்ஸ்’ இதய ஸ்டெண்ட்டும் தீவிரமாக ஒப்பிடப்பட்டது. அப்போது டாக்டர் கவுல் கூறியதாவது:
இந்தியாவில் 66 இதய சிகிச்சை மய்யங்களில் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது. நீரிழிவு மற்றும் இதயத்துக்கு ரத்தம் செலுத்தும் 3 முக்கிய நாளங்களிலும் அடைப்பு உள்ளவர்களுக்கு இந்திய தயாரிப்பு ஸ்டென்ட் பொருத்தி பரிசோதிக்கப்பட்டது.
இவர்களில் 80 சதவீதம் பேர், 3 முக்கிய ரத்த நாளங்களிலும் அடைப்பு உள்ளவர்கள். இந்த பரிசோதனை இந்தியத் தயாரிப்பு ‘சுப்ராபிளக்ஸ் க்ரஸ்’ ஸ்டென்ட், பன்னாட்டு தரத்திலான ஸ்டென்ட்டுக்கு எந்தவிதத்திலும் குறைவு இல்லை என்பதை நிரூபித்தது. குஜராத்தின் சூரத் நகரில் இந்த ஸ்டென்ட் தயாராகிறது. இவ்வாறு மருத்துவர் கவுல் கூறினார்.
