கொளுத்தும் கோடை வெப்பத்தால் மக்கள் அவதி

Viduthalai
2 Min Read

சென்னை, மே 16 – தமிழ்நாடு முழுவதுமே கோடை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. ‘மோக்கா’ புயல், வெப்பத்தை ஏற்படுத்தி சென்றிருக்கிறது. சென்னை நகரமே அனல் பூமியாக மாறியிருக்கிறது. வெயிலின் தாக்கம் காலை முதலே காணப்படுகிறது. 

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கடலூர், ஈரோடு, கரூர், நாகை, நாமக்கல், பாளையங்கோட்டை, பரங்கிப் பேட்டை, சேலம், தஞ்சை, திருச்சி, திருத்தணி, வேலூர் ஆகிய 14 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்தது. அதிகபட்சமாக வேலூரில் 108.14 டிகிரி வெயில் பதிவானது. 

தமிழ்நாட்டில் இன்றும் (16.5.2023) அனேக இடங்களில் வெயில் சுட்டெரிக்கும் என்றும், ‘இயல்பை விட 3 டிகிரி வரை வெப்பம் உயரும்’ என்றும் வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

‘மோக்கா’ புயல் கரையைக் கடந்தாலும், மேற்கு திசை காற்றும் மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 16, 17ஆம் தேதிகளில் (இன்றும், நாளையும்) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், 18, 19ஆம் தேதி களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மழை ஆறு தலை கொடுக்கும் வகையில் இன்னொரு அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது. அதாவது 16ஆம் தேதி (இன்று) தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக் கூடும் என்றும், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப் பதம் இருக்கும் போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற் படலாம் என்றும் அறிவிக்கப்பட்டி ருக்கிறது.

குறிப்பாக சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளை பொறுத்த வரையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *