சென்னை, அக்.22 சென்னை விமான நிலையத்தில் பட்டாசுப் புகை சூழ்ந்ததால் 15 விமானங்களில் சேவை சிறிதளவு பாதிக்கப்பட்டது.
தீபாவளி அன்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தைச் சுற்றி உள்ள பகுதிகளில் அதிக அளவி லான பட்டாசுகள் தொடர்ச்சியாக வெடிக்கப்பட்டன. இதனால் எழுந்த புகையால் காற்றில் மாசு ஏற்பட்டது. இதனால், சென்னை விமான நிலை யத்தில் ஓடுபாதை பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்தது.
இதையடுத்து விமான வருகை, புறப்பாட்டுக்கு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரிகள், தரையிறங்க வந்த விமானங்களுக்கு உடனடியாக அனுமதி கொடுக்காமல், ஓடு பாதைகளைக் கண்காணித்து, ஓடுபாதை தெளிவாகத் தெரிந்தால் மட்டுமே விமானங்கள் தரையிறங்க அனுமதித்தனர். அது வரையில் விமானங்களை தொடர்ந்து வானில் வட்டமடித்து பறக்கச் செய்தனர். அதேபோல், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களுக்கும் உடனடியாக புறப்பட சிக்னல் கொடுக்காமல், ஓடுபாதையை கண்காணித்து, ஓடுபாதை தெளிவாகத் தெரிந்தால் மட்டுமே விமானங்கள் ஓடுபாதையில் ஓடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
விமான சேவை பாதிப்பு
இதனால், சென்னையில் தரையிறங்க வந்த, அய்தராபாத், குவஹாட்டி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மற்றும் லக்னோ, மதுரை, டில்லி, பெங்களூர், டாக்கா பகுதிகளிலிருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸின் 7 விமானங்கள் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்த பின்னர் தரையிறங்கின. சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய டெல்லி, கொச்சி, பெங்களூரு, கோவை, அய்தராபாத், தோகா, கோலாலம்பூர் ஆகிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள், அய்தராபாத் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தாமதமாக புறப்பட்டுச்சென்றன. பட்டாசு புகை மண்டலத்தால் மொத்தமாக சென்னை விமான நிலையத்தில் 7 வருகை விமானங்கள், 8 புறப்பாடு விமானங்களின் சேவை சிறிதளவு பாதிக்கப்பட்டது.
