சென்னை அக்.21- தமிழ்நாட்டில் ‘டி.டி.ஆர் எனப்படும் வளர்ச்சி உரிமை மாற்று சான்றிதழை, நகரம் மாற்றி பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் விதிகளை தளர்த்த வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இது, அரசு திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு மேலும் ஊக்கமளிக்கும் எனக் கூறப்படுகிறது.
வளர்ச்சி உரிமை மாற்று சான்றிதழ் என்றால் என்ன? நகர்ப்புறங்களில் சாலை விரிவாக்கம், மேம்பாலம் அமைத்தல் போன்ற அரசு திட்டங்களுக்காக தனியாருக்கு சொந்தமான நிலங்கள் கையகப்படுத்தப்படும்போது, இழப்பீடை ரொக்கமாக வழங்குவதால் திட்டச் செலவு அதிகரிக்கிறது. இதற்கு மாற்றாக, நிலத்தின் உரிமையாளருக்கு, கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் எவ்வளவு பரப்பளவுக்கு கட்டடம் கட்ட முடியுமோ, அந்த உரிமையை (வளர்ச்சி உரிமை) தனக்கு சொந்தமான வேறு நிலத்தில் பயன்படுத்திக் கொள்ள ‘வளர்ச்சி உரிமை மாற்று சான்றிதழ்’ வழங்கப்படுகிறது. இதன் மூலம் உரிமையாளர் வேறு இடத்தில் கூடுதல் பரப்பளவுக்கு கட்டடம் கட்டிக் கொள்ளலாம். வேறு இடத்தில் நிலம் இல்லாதவர்கள், இந்தச் சான்றிதழை தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு விற்பனை செய்யவும் அனுமதிக்கப்படுகிறது. சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிலம் கொடுத்த பலர், இந்தச் சான்றிதழை விற்பனை செய்துள்ளனர். சி.எம்.டி.ஏ., டி.டி.சி.பி., போன்ற அமைப்புகள் இதற்கான சான்றிதழை வழங்குகின்றன.
தற்போதுள்ள விதிகளில், இந்த உரிமையை சம்பந்தப்பட்ட நகரத்துக்கு வெளியே பயன்படுத்துவது குறித்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை. வளர்ச்சி உரிமை மாற்று சான்றிதழை நகரம் மாற்றி பயன்படுத்த அனுமதித்தால், இத்திட்டத்தில் பங்கேற்க பலரும் முன்வருவர் என்று கூறப்படுகிறது. உதாரணமாக, சென்னையில் அரசு திட்டத்துக்கு நிலம் கொடுத்த ஒருவர், அதற்கான வளர்ச்சி உரிமையை திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் உள்ள தன் நிலத்தில் பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.
இந்த விதி தளர்வு, நிலம் கையகப்படுத்துதல் நடைமுறையை எளிமையாக்குவதுடன், நிலத்தின் உரிமையாளர்களுக்கும், கட்டுமானத் துறைக்கும் பரவலான பலன்களை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
