06.03.1948 – குடிஅரசிலிருந்து…
10 வயதுள்ள பிராமணனும், 100 வயதுள்ள சத்திரியனும் பிதா – புத்திரன் என்ற மரியாதையோடு நடக்கவேண்டும். அதாவது பிராமணனைப் பிதாவாகவும், சத்திரியனைப் பிராமணனுடைய புத்திரனாகவும் கருதவேண்டும். இந்த மனு நீதி சட்டமாக ஒப்புக் கொள்ளப்பட்டிருக்க, அதை நடைமுறையில் நடத்தி வருகிற நமது திராவிட மந்திரிகள், அக்கிரகாரச் சிறுவரான அய்ந்து வயது அனந்தராமனுக்கு எப்படிச் சொந்தம்? என்ன முறை?
பாப்பாத்தி மொட்டையடிக்கிறாளா?
பார்ப்பான் காவடி தூக்குகிறானா?
05.06.1948 -குடிஅரசிலிருந்து..
கடவுள் என்றால் கல், களிமண், புல், பூண்டு, செடி, கொடி, கழுதை, குதிரை, சாணி, மூத்திரம் இத்தனையும் கடவுளா? கடவுள் என்றால் அறிவுக்குக் கட்டுப்பட்டதாக இருக்க வேண்டாமா? திருப்பதிக்குப் போய் மொட்டையடித்துக் கொண்டு வருகிறீர்களே! சாமி மயிரா கேட்கிறது? எந்தப் பார்ப்பனத்தியாவது திருப்பதிக்குப் போய் மொட்டையடித்துக் கொண்டு வருகிறாளா? இப்போது தாலியறுத்தால் கூட அவர்கள் மொட்டையடித்துக் கொள்வதில்லையே? மொட்டையடிக்கப்படும் என்று தெரிந்தால் அதற்கு முன்பே வீட்டை விட்டு யாருடனாவது ஓடி விடுகிறார்களே! அப்படி இருக்க உங்கள் மயிரைத்தானா சாமி கேட்கும்? உங்கள் கணவன்மாரைக் காவடி தூக்கிச் செல்ல அனுமதிக்கிறீர்களே அது தகுமா? எந்தப் பார்ப்பானாவது பழனி ஆண்டவனுக்குக் காவடி தூக்கிச் செல்வதைப் பார்த்திருக்கிறீர்களா? அய்ந்து புருஷர்கள் போதாதென்று 6 ஆவது புருஷனையும் விரும்பிய துரவுபதியம்மாளை போய்க் கும்பிடு கிறீர்களே! அவளுக்கு மாவிளக்கு வைக்கிறீர்களே, உங்களுக்கு இன்னும் அதிகப்படியான புருஷர்கள் வேண்டுமென்று வரங்கேட்கவா, அந்தப்படி செய்கிறீர்கள்? திராவிடத் தாய்மார்களாகிய உங்களுக்கு அடுக்குமா இது?
(08.05.1948 அன்று தூத்துக்குடியில் நடந்த திராவிடர் கழக மாகாண மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு)