பரிந்துரைகளை ஏற்று சட்டம் இயற்றப்படும்! சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு!

மறைமலைநகரில் (செங்கல்பட்டு) திராவிடர் கழகம் நடத்திய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டுத் தீர்மானத்தைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் சங்கநாதம்!
ஆணவப் படுகொலையைத் தடுக்க
உயர்நீதிமன்ற– ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம்!
பரிந்துரைகளை ஏற்று சட்டம் இயற்றப்படும்!
சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு!

சென்னை, அக்.17  செங்கல்பட்டு – மறைமலைநகரில் கடந்த 4 ஆம் தேதி திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எடுத்துக்காட்டி, ஆணவப் படுகொலையைத் தடுக்க உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற  நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு, ஆணையம் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் ஜாதி ஆணவப் படுகொலையைத் தடுக்கும் உரிய சட்டம் நிறைவேற்றப்படும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பினை இன்றைய தினம் (17.10.1025) சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

Contents

அவரது அறிவிப்பு வருமாறு:

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கூடுதல் செலவிற்கான மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளுக்கெல்லாம் மிகத்தெளிவாக, துல்லியாக பதிலளித்து நம்முடைய நிதி அமைச்சர் அவர்கள் சிறப்பாக இங்கே பேசியிருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.  மேலும், நேற்றைய விவாதத்தில் மாண்புமிகு உறுப்பினர்கள் சிலர், ஆணவப் படுகொலை குறித்து தெரிவித்த சில கருத்துகளுக்கு நான் இப்பேரவைக்குத் தங்கள் வாயிலாக பதிலளிக்க விரும்புகிறேன்.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ – என்ற அறநெறியை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சொன்ன வான்புகழ் வள்ளுவர் பிறந்த மண், இந்தத் தமிழ் மண்!

‘ஜாதி யிரண்டொழிய வேறில்லை,

இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்’  என்கிறார் அவ்வை மூதாட்டி.

இடையில் புகுந்தவர்களால்…

இதுதான் தமிழர் தம் நெறியாகும். தமிழர் போற்றி வந்த பண்பாடு!  இடைக்காலத்தில் புகுந்தவர்களால் தொழில் வேற்றுமையானது; ஜாதி வேற்றுமையாக மாற்றப்பட்டது; உயர்வு-தாழ்வு கற்பிக்கப்பட்டது; மேல்-கீழ் என்ற வேற்றுமை விதைக்கப்பட்டது. வேற்றுமை விதைக்கப்பட்ட உடனேயே ஒற்றுமைக்கான குரல்களும் தமிழ் மண்ணில் உரக்க ஒலித்ததைக் காண்கிறோம். பல சீர்திருத்தக் கருத்துகள் இயக்கமாகவே உருவெடுத்துள்ளன. அயோத்திதாசப் பண்டிதர், தந்தை பெரியார், தமிழ்த் தென்றல் திரு.வி.க., புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், அறிஞர் அண்ணா ஆகியோர் இந்தச் சீர்திருத்த சிந்தனைகளை தமிழ் மண்ணில் விதைத்தார்கள்.

கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம் பொருந்திய பதவிகள், அனைவருக்கும் சமவாய்ப்பு, சம அதிகாரம் ஆகியவற்றை தருவதன் மூலமாக யாவரும் ஒருவரே என்பதை உருவாக்கவே இந்த இயக்கங்கள் போராடின; வாதாடின; மன மாற்றங்களை செய்தன. ஜாதிக்கு, மதத்துக்கு தரப்பட்ட முக்கியத்துவத்தை தமிழ் மொழிக்கு, தமிழ் இனத்துக்கு தரும் சிந்தனையை திராவிட இயக்கம், தனித்தமிழ் இயக்கங்கள் விதைத்தன. இனமும், மொழியும் நமது அடையாளங்களாக மாற்றியது இதன் சாதனைகள்.

சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்புரை செய்து வந்த அதே காலகட்டத்தில் அதற்கான சட்டங்களையும், திட்டங்களையும் கொண்டு வந்து, சமூக சீர்திருத்த ஆட்சியை தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் நடத்தினார்கள். அதன் வழித்தடத்தில்

‘திராவிட மாடல்’ ஆட்சியை நாங்கள் நெஞ்சை நிமிர்த்தி நடத்தி வருகிறோம்.

‘காலனி’ என்ற சொல் நீக்கம்!

அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்கி இருக்கிறோம். பெரியார் பிறந்த நாளிலும், அம்பேத்கர் பிறந்த நாளிலும் இந்த நாடே உறுதிமொழி எடுக்கிறது. இவர்கள் பிறந்த நாளில் அனைவரும் சமூகநீதி, சமநீதி உறுதிமொழி எடுப்பது சாதாரணமான சாதனையல்ல.  தமிழ்நாடு சட்டப்பேரவை, இதே அவையில் 29.04.2025 அன்று  உரையாற்றிய போது, ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும், வசைச் சொல்லாகவும் இருக்கும் “காலனி” என்ற சொல்லை நீக்குவோம் என்று அறிவித்தேன்.  பள்ளி, கல்லூரி விடுதிகளில் ஜாதி அடையாளங்கள் இருக்கக்கூடாது என்பதற்காக, அவற்றை “சமூக நீதி” விடுதிகளாகப் பெயர் மாற்றியிருக்கிறோம்.

மாண்புமிகு  பேரவைத் தலைவர் அவர்களே, இந்திய பிரதமர் அவர்களை சமீபத்தில் நேரில் சந்தித்து, முக்கியமான ஒரு கோரிக்கையை வைத்தேன். “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பட்டியலில் உள்ள ஜாதிப் பெயரில், இறுதி எழுத்தில் முடிவடையும் ‘இன்’ என்பதற்குப் பதிலாக ‘இர்’ என விகுதி மாற்றம் செய்து, அந்தச் சமூக மக்களுக்கு உரிய மரியாதை கிடைக்க வழி செய்யும்வண்ணம் ஒன்றிய அரசு உரிய சட்டம் இயற்ற விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்பதுதான் அந்தக் கோரிக்கை.

சமூகநீதி – சமத்துவம் – சகோதரத்துவம் – பொதுவுைடமை – பொது உரிமை – கல்வி உரிமை – அதிகார உரிமை ஆகிய கொள்கைகள்தான் வேற்றுமையை, பகைமையை விரட்டும்.  அதனைத் தான் நாங்கள் செய்து வருகிறோம்.  இதன் மூலமாகத் தான் சமத்துவம் கொண்ட சமுதாயத்தை உருவாக்க முடியும்.

ஆனால், இத்தகைய சூழலில் நாட்டில் நடைபெறும் சில சம்பவங்கள் நமது மனதை வேதனையடைய வைத்துள்ளன.  இதற்காகவா நமது தலைவர்கள் போராடினார்கள், நாம் போராடி வருகிறோம் என்ற வேதனை ஏற்படுகிறது. உலகம் அறிவுமயமாகி வருகிறது.  “ஆனால் அன்புமயம் ஆவதை எது தடுக்கிறது?” என்பதுதான் இன்று சீர்திருத்த எண்ணம் கொண்டவர்களை வாட்டி வருகிறது. உலகம் முழுக்க பரவி, அறிவினால் மதிக்கப்பட்டு வரும் நம் தமிழ்ச் சமுதாயம், உள்ளூரில் சண்டை போட்டுக்கொள்வது என்ன நியாயம்? என்பதுதான் நம்மை வருத்தும் கேள்வி யாக அமைந்திருக்கிறது. எதன் காரணமாகவும் ஒருவரை மற்றவர் கொல்வதை நாகரிக சமுதாயத்தால் ஏற்க இயலாது.  கொல்வதை மட்டுமல்ல – பகைப்பதை, சண்டை போட்டுக்கொள்வதை, அவமானப்படுத்துவதை என எதையும் பண்பட்ட, வளர்ச்சியுற்ற ஒரு சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆணவப் படுகொலைகள் எப்படியாவது
தடுக்கப்பட வேண்டும்!

அவ்வப்போது ஏதேனும் ஒரு பகுதியில் நடந்துவிடும் ஒரு  துயரமான சம்பவம் நம் நெஞ்சை உலுக்கி விடுகிறது. நம் சமுதாயத்தையே தலைகுனியச் செய்து விடுகிறது. பெண்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கையை தாங்களே தீர்மானிக்கும் உரிமையைப் பறிக்கும் ஆணாதிக்கமும் இந்தக் குற்றச் செயல்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கிறது.  இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். இந்த வேதனையைத்தான் நேற்றைய தினம் (16.10.2025) நமது உறுப்பினர்கள் பலரும் வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறீர்கள்.  ஆணவப் படுகொலைகளைத் தடுக்க வேண்டும், எப்படியாவது தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறீர்கள்.

திராவிடர் கழகம் நடத்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!

சமீபத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தீர்மானமாக நிறைவேற்றி என்னிடத்தில் கொடுத்திருக்கிறார்கள். ஆணவப் படுகொலை களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, சமுதாய மாற்றத்தையும் ஏற்படுத்தி, அதன் மூலம் இந்த அநீதியைத் தடுக்க வேண்டும் என்பது நம் அனைவரது ஆதங்கமாக இருக்கிறது.

ஆணவப் படுகொலை நடைபெறும்போது, அது தொடர்பான வழக்குகள் அனைத்திலும் கடுமையான பிரிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இப்படுகொலைகளுக்கு ஜாதி மட்டுமே காரணமல்ல, இன்னும் பல காரணங்களும் இருக்கின்றன.  எதன்பொருட்டு நடந்தாலும், கொலை – கொலை தான்.  அதற்கான தண்டனைகள் மிக, மிகக் கடுமையாகவே தரப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

யாரும் – எவரும் – எதன்பொருட்டும், செய்த குற்றத்தில் இருந்து தண்டனை இல்லாமல் தப்பிவிடக் கூடாது என்பதை காவல் துறைக்கு உத்தரவாகப் போட்டுள்ளோம்.  எனவே, சட்டம் அதன் கடமையைச் செய்கிறது.

அதே நேரத்தில், இக்கொடூரமான சிந்தனைக்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரையை சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் மட்டுமல்ல; அரசியல் இயக்கங்களும், பொதுநல அமைப்புகளும் செய்ய வேண்டும் என்பதை என்னுடைய வேண்டுகோளாக வைக்க விரும்புகிறேன்.  நாகரிக சமுதாயத்தின் அடையாளம் என்பது பொருளாதார மேம்பாடு மட்டுமல்ல, சமூகச் சிந்தனையில் மேம்பாடு என்பதை உணர்த்துவதாக இப்பரப்புரைகள் இருக்க வேண்டும். சமுதாயத்தில் ஜாதி வேற்றுமைக்கு எதிராக, ஆதிக்க மனப்பான்மைக்கு எதிராக அனைவரும் பேச வேண்டும். மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் ஏதுமில்லை; அனைவரும் சமம்; பாலின சமத்துவமும், வளர்ச்சி பெற்ற ஒரு சமுதாயத்திற்கு ஓர் அடையாளம் என்றார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள்.

அனைத்துவிதமான ஆதிக்க மனப்பான்மைக்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். ஆதிக்க எதிர்ப்பும் – சமத்துவ சிந்தனையும் கொண்ட  சுயமரியாதையும் – அன்பும் சூழ்ந்த மானுடத்தை உருவாக்குவதற்கான பரப்புரையை ஓர் இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமை!  சீர்திருத்தப் பரப்புரையும் – குற்றத்திற்கான தண்டனையும், வாளும் கேடயமுமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

நீதிபதி கே.என்.பாஷா (ஓய்வு) தலைமையில் ஓர் ஆணையம்

இது குறித்து தேவையான பரிந்துரைகளை அளிப்பதற்காக  உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி திரு. கே.என்.பாஷா அவர்கள் தலைமையில் சட்ட வல்லுநர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், மானுடவியல் அறிஞர்களைக் கொண்ட ஓர் ஆணையம் அமைக்கப்படும் என்பதை என்னுடைய முக்கியமான அறிவிப்பாக இம்மாமன்றத்தில் அறிவிக்கிறேன்.

இந்த ஆணையம் அரசியல் இயக்கங்கள், ச‌‌ட்ட வல்லுநர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் என அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் பெற்று, இப்பொருள் குறித்து உரிய பரிந்துரைகளை வழங்கும்.   அதனடிப்படையில், தமிழ்நாடு அரசு ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் நோக்கில் உரிய சட்டம் இயற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று உறுதி அளித்து அமைகிறேன்.

– இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *