ச |
ுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “மானமிகு ஆசிரியர் அவர்கள் உருவாக்கிக் கொடுத்துள்ள தீர்மானங்களை சமூகக் களத்தில் நீங்கள் பரப்புரை செய்யுங்கள். திராவிட முன்னேற்றக் கழகமானது ஆட்சியைப் பயன்படுத்தி சட்டங்களாக, விதிமுறைகளாக, நெறிமுறைகளாக வகுப்போம்” என்று உறுதி அளித்தார். நேற்றைய தினம் (10.10.2025) வெளியாகி உள்ள அரசு ஆணை, இதனை மய்யப்படுத்தியதாக இருக்கிறது.
மாநிலம் முழுவதும் உள்ள தெருக்கள், சாலைகள், வருவாய் கிராமங்களின் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்கி மறுபெயரிடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை, சமத்துவத்தை உருவாக்கும் பயணத்தில் ஒரு மைல் கல் ஆகும்.
ஜாதி, மதம், பாலினம், செல்வம், அதிகாரம் போன்ற எந்தவொரு காரணத்தாலும் வேறுபாடு இல்லாத, சம வாய்ப்புகள் கொண்ட ஒரு நியாயமான மற்றும் முன்னேற்றமிக்க சமத்துவ சமூக அமைப்பை நோக்கி பல்வேறு திட்டங்கள், பணிகள், கொள்கை முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதாக இந்த அரசாணை உறுதி அளிக்கிறது.
அனைத்துத் தரப்பு மக்களும் மதிப்போடும், சமமாகவும் நடத்தப்படும் போது மட்டுமே உண்மையான சமத்துவ சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருவதை இந்த அரசு ஆணை உறுதி செய்கிறது.
கடந்த ஏப்ரல் 29–ஆம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். “ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும் வசைச் சொல்லாக மாறியிருப்பதால் ‘காலனி’ என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொதுப் புழக்கத்திலிருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மாண்புமிகு முதல் அமைச்சர் அறிவித்தார்கள். இதன் தொடர்ச்சியாக இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் காலனி, அரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம், பறையர் தெரு, சக்கிலியர் தெரு போன்ற பெயர்கள் உறுதியாக மாற்றப்பட வேண்டும். குளம் மற்றும் நீர் நிலைகளுக்கு பூக்களின் பெயர்களையும், தெருக்கள் மற்றும் சாலைகளுக்கு தமிழ் அறிஞர்கள் மற்றும் தலைவர்கள் பெயர்களையும் சூட்ட வேண்டும். இந்தப்பணிகளை நவம்பர் 19ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜாதிச் சான்றிதழ்கள் மற்றும் ஆதார் அட்டையில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், குடும்ப அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள ELCOT மூலமாக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
குடியிருப்புகள், சாலைகள், தெருக்கள், பேருந்து நிலையங்கள், சந்தைகள், நீர்நிலைகள் போன்ற பொது உட்கட்டமைப்புகள் ஆகியவற்றில் ஜாதிப் பெயர்கள் இடம் பெறாத வகையில் திருத்தங்கள் செய்யலாம் என்றும் பதிவுத்துறைக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது.
‘ஜாதியை மறுத்தல்’ என்பதன் முதல்படி, ஜாதி அடையாளங்களைத் தவிர்த்தல் ஆகும். அதனைத்தான் மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்கள் செய்து காட்டி வருகிறார்கள்.
ஏற்ெகனவே ஜாதிப் பெயர் தாங்கிய பள்ளி, கல்லூரி விடுதிகளின் பெயர்கள் நீக்கப்பட்டு அவை ‘சமூகநீதி விடுதிகள்’ என ஆக்கப்பட்டுள்ளன. இதன்மூலமாக அந்த அடையாளச் சொல்லை வைத்து இழிவு செய்வது தவிர்க்கப்படுகிறது.
மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்த முதல் அமைச்சர் அவர்கள், அதில் வைத்த மிக முக்கியமான கோரிக்கையும் இது தொடர்பானது ஆகும்.
“தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட அய்ந்தில் ஒரு பங்காக (1/5) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் உள்ளனர், தமிழ்நாட்டின் ஜாதிப் பெயர் பட்டியலில் 76 ஆதிதிராவிடர் ஜாதிப் பெயர்களும், 37 வகையான பழங்குடியினர் ஜாதிப் பெயர்களும், அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகங்களைச் சேர்ந்த பெரும்பான்மை யான மக்கள் தங்கள் ஜாதிப் பெயரில் இறுதி எழுத்து ‘N’ மற்றும் ‘A’ என முடிவதால், ஜாதிப் பெயரை ஒருமையுடன் குறிப்பிடுவதாக இருப்பதாகவும் எனவே சமூகத்தில் உரிய பெருமை கிடைக்கப் பெறவில்லை எனவும் கூறி ‘N’ மற்றும் ‘A’ என்பதற்குப் பதிலாக ‘R’ எனப் பெயர் மாற்றம் செய்து தங்களுக்கு உரிய மரியாதையைப் பெற்றுத் தருமாறு அரசிடம் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். தமிழ்நாடு அரசு மேற்காணும் ஜாதிகளில் உரிய பெயர் மாற்றம் செய்ய சட்டமியற்றுமாறு இந்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது” என்பதுதான் பிரதமரிடம் முதலமைச்சர் வைத்த கோரிக்கை ஆகும்.
ஊரின் பெயர்2, தெருவின் பெயர், சாலையின் பெயர், பள்ளியின் பெயர், விடுதியின் பெயர் ஆகியவை மூலமாக ஜாதியை அடையாளப்படுத்தி இழிவு செய்தல் இனியும் தொடரக் கூடாது என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நினைக்கிறார்கள்.
‘சமூகரீதியாக’ பகை கொள்வதைத் தடுத்தாலே 90 விழுக்காடு ஜாதிச் சண்டைகள் முடிவுக்கு வந்துவிடும் என்பதே உண்மை. அதற்கு ‘சமூகரீதியாக’ அடையாளப்படுத்துதல், அடையாளம் காணுதல் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதனைத்தான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் செய்துள்ளார்கள்.
நன்றி: ‘முரசொலி’ தலையங்கம் 11.10.2025