யார் இந்த பி.ஆர்.கவாய்? ஏன் குறி வைக்கப்படுகிறார்?

ி.ஆர்.கவாய். 1960ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி மகாராட்டிர மாநிலத்தில் உள்ள அமராவதி நகரில் பிறந்தவர். இவரது தந்தை ஆர்.எஸ்.கவாய் கேரளா மற்றும் பீகார் மாநிலங்களின் ஆளுநராக பணியாற்றி யவர். குடியரசுக் கட்சித் தலைவரும் கூட.

அமராவதியில் பள்ளிக் கல்வியை முடித்த பி.ஆர்.கவாய், மும்பையில் தனது சட்டப் படிப்பை முடித்தார். பின்னர் 1985 மார்ச் 16-ஆம் தேதி பார் கவுன்சிலில் உறுப்பினராக இணைந்தார். இரண்டு ஆண்டுகள் உயர் நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி மற்றும் மேனாள் அட்வகேட் ஜெனரலுடன் பணியாற்றிய அவர் 1987ஆம் ஆண்டு பம்பாய் உயர் நீதிமன்றத்தில் தனியாக பயிற்சியைத் தொடங்கினார். பின்னர், 1990ஆம் ஆண்டு முதல் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பிரிவில் வழக்குரைஞராக தனது பணியைத் தொடர்ந்தார். நாக்பூர் மற்றும் அமராவதி நகராட்சிகளுக்கும், அமராவதி பல்கலைக் கழகத்திற்கும் சட்ட ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.

ஆகஸ்ட் 1992 முதல் ஜூலை 1993 வரை, பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்சில், அரசு உதவி வழக்குரைஞராகவும் அரசு கூடுதல் வழக்குரைஞராகவும், பணியாற்றினார். 2000 ஜனவரி 17ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்சிற்கு அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்ட பி.ஆர்.கவாய் 2003 நவம்பர் 14ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியானார்.

2005ஆம் ஆண்டு முதல் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக பணியாற்றினார். அந்த காலகட்டத்தில் பல முக்கிய வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கியுள்ளார். 14 ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய அவர் 2019ஆம்  ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியானார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக, பல வரலாற்று சிறப்புமிக்க வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார். குறிப்பாக ஒன்றிய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை 2023 ஆம் ஆண்டில் உறுதி செய்த உச்ச நீதிமன்ற அமர்வில் பி.ஆர். கவாய் இடம் பெற்றிருந்தார். அதேபோல ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி வழங்கிய 370ஆவது பிரிவை ஒன்றிய அரசு ரத்து செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சட்டப் பிரிவு 370அய் ரத்து செய்வதற்கான ஒன்றிய அரசின் நடவடிக்கையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த அரசியலமைப்புச் சட்ட அமர்விலும் நீதிபதி கவாய் இடம் பெற்றிருந்தார்.

அதேபோல உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரத் திட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று அறிவித்து அதனை ரத்து செய்தது. இந்த தீர்ப்பை வழங்கிய அய்ந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விலும் நீதிபதி பி.ஆர். கவாய் இடம்பெற்றிருந்தார். இதுபோன்ற பல வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய பி.ஆர்.கவாய் மே 14 2025ஆம் ஆண்டு 52ஆவது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார். இதனால் நீதித்துறையை வழிநடத்தும் முதல் பவுத்த மற்றும் இரண்டாவது தலித் தலைமை நீதிபதி என்ற பெருமையையும் கொண்டுள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தில் ஆழமான நிபுணத்துவம் கொண்டவர் என அறியப்படுகிறார். பல தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் பணியாற்றியுள்ளார். அத்தோடு அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சமூக நீதியில் ஆழ்ந்த அறிவு கொண்டவராகவும் அறியப்படுகிறார். இந்நிலையில்தான் தற்போது இந்தியாவில் சமூக வலைதளங்களில் அதிகம் குறிவைக்கப்படும் நபராகவும் இருக்கிறார். காரணம், அவர்மீது சமீபத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் முயற்சிதான். அதாவது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி வழக்கம் போல முதல் அமர்வில் விசாரணைக்கு வந்த வழக்கை விசாரித்துக்கொண்டிருந்தபோது, நீதிமன்ற வளாகம் என்றுகூட பாராமல் வழக்குரைஞர் ஒருவர் அவர்மீது தனது காலணியைத் தூக்கி வீசி தாக்குதலில் ஈடுபட முயன்றுள்ளார். ஆனால் நல்வாய்ப்பாக காலணி நீதிபதி மீது விழாது முன்னிருந்த மேசைக்கு முன்பாக விழுந்துள்ளது. “ஸநாதனத்தின் மீதான அவமானத்தை இந்தியா பொறுத்துக்கொள்ளாது” எனக் கூச்சலிட்டுக்கொண்டே தாக்க முயன்ற வழக்குரைஞர் கிஷோர் ராகேஷை நீதிமன்றப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

ஆனால், இதனையெல்லாம் கண்டுகொண்டி ருந்த நீதிபதி எந்த பதற்றமும் சஞ்சலமும் அடையாமல் “இதுபோன்ற விஷயங்களால் பாதிக்கப்படக்கூடிய கடைசி ஆள் நானாக இருப்பேன். இது போன்ற விஷயங்கள் என்னை ஒருபோதும் பாதிக்காது.. நீங்கள் வாதத்தை தொடருங்கள்” என்று கூறி விசாரணையைத் தொடர்ந்துள்ளார்.

அவர் மீதான விமர்சனங்களுக்கும், சமூக வலைதள தாக்குதல்களுக்கும்.. ஏன், நடந்து முடிந்த சம்பவத்திற்குக் கூட காரணம் அவர் சமீபத்தில் கையாண்ட வழக்கிற்கு வழங்கிய தீர்ப்பு . அதாவது மத்திய பிரதேசம் மாநிலம் கஜுராஹோ கோயிலில் சேதமடைந்த விஷ்ணு சிலையை புதுப் பிக்கக் கோரிய வழக்கில் “இது முற்றிலும் விளம்பர நோக்குடைய பொதுநல வழக்கு. நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என சொல்கிறீர்கள். அதனால், தெய்வத்திடமே சென்று ஏதாவது செய்யும்படி கேளுங்கள்.

அது தொல்லியல்துறையின் கீழ் இருக்கும் தளம். எனவே ஏ.எஸ்.அய்.யிடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுக்க வேண்டும்” என கருத்து தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனத்தைத் தூண்டியது. பலர் தலைமை நீதிபதி விஷ்ணு பக்தர்களின் நம்பிக்கையை அவமரியாதை செய்துவிட்டதாக விமர்சித்து வந்தனர். அதேபோல அவர் ஸநாதனத்திற்கு எதிராக செயல்படுவதாகக் கூறி அவரை விமர்சித்து வருகின்றனர்.

குறிப்பாக வலதுசாரிகளால் மிகவும் விமர்சிக்கப்படும் நபராக மாறியிருக்கிறார். இந்து மதத்தின் மாண்பை புண்படுத்தும் வகையிலும், ஸநாதனத்திற்கு எதிராகவும் செயல்படுவதாகவும் இவர்மீது பல்வேறு விமர்சனங்கள் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல தலித் தலைமை நீதிபதி என்பதாலேயே இவர் குறிவைக்கப்படுகிறார் என்றும் கருத்துகளும் உலவத் தொடங்கி
யுள்ளன.  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு தலைவர்கள் மற்றும் நீதிபதிகள் தங்களது கண்டனங்களைத் தெரி
வித்து வருகின்றனர். தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வரும் நவம்பர் மாதத்தோடு ஓய்வு பெறவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *