சென்னை, அக்.9- ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.
தீப்பற்றும் பொருட்கள்
நாடு முழுவதும் கோடிக்க ணக்கானோர் ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் எளிதான பயணத்திற்காக சில விதிகளை ரயில்வே வாரியம் விதித்துள்ளது. குறிப்பாக, ரயில்களில் விபத்து ஏற்படுத்தும் வகையிலான பொருட்களை கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில், ரயில்களில் எளிதில் தீப்பற்றும் பொருட்களான அடுப்புகள், எரியக்கூடிய ரசாயனங்கள், பட்டாசுகள், கழிப்பறை சுத்தம் செய்யும் அமிலம், டீசல், பெட்ரோல், சிகரெட் போன்றவற்றை எடுத்துச் செல்ல தடை உள்ளது. இந்த தடை தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. ஆனால், பண்டிகை காலங்களில் வியாபாரிகள் மற்றும் பயணிகள் பட்டாசு உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
ரூ.1000 அபராதம்
ரயில்களில் ஆபத்தான பொருட்களை எடுத்துச்செல்வது தண்டனைக்குரிய குற்றம் எனவும், எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கக்கூடிய பொருட்களை ரயிலில் எடுத்து செல்லாமல் பயணிக்க வேண்டும் எனவும் தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, பண்டிகை காலங்களில் இந்த சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறுவதால், ஒவ்வொரு ஆண்டும் முன்னதாகவே ரயில்வே நிர்வாகம் சார்பில் ரயில்வே காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் மூலம் ரயில் பயணிகளுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியபோது, ‘ரயில்களில் பட்டாசு உள்பட தீவிபத்து ஏற்படுத்தும் பொருட்கள் கொண்டு செல்ல தடை உள்ளது. இதுகுறித்து பெரும்பாலான பயணிகளுக்கு விழிப்புணர்வு இருப்பதால் ரயில்களில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் எடுத்து செல்வதில்லை. சிலர் பண்டிகை காலங்களில் விதிமுறைகளை மீறி பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து வருகின்றனர். இதனால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகிறது. எனவே, தடையை மீறி பட்டாசு கொண்டு செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.ரெயிலில் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு சென்று, முதல் முறையாக பிடிபட்டால் ரூ.1,000 அபராதம் அல்லது 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்படும். தொடர்ந்து, விதிமீறல்களில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றார்கள்.