சென்னை, அக்.8- ”தமிழ்நாட்டை ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தல் தலைநகரமாக மாற்ற தொடர் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்,” என, தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறினார்.
தமிழ்நாடு அரசின் திட்டக்குழு சார்பில், ‘தமிழ்நாடு நிலைப்பாடுகள் -2025’ என்ற தலைப்பில், இரண்டு நாள் மாநாடு, சென்னை அய்.அய்.டி., ஆராய்ச்சி பூங்காவில் நேற்றுமுன்தினம் (6.10.2025) தொடங்கியது.
இதில், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேசியதாவது:
இந்த மாநாட்டில், 150க்கும் மேற்பட்ட பல்கலையை சேர்ந்த, 800க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், தங்கள் ஆராய்ச்சிகளை சமர்ப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு வகைப்பாடுகள் கொண்ட நிலங்களை, எப்படி பயன்படுத்தலாம், எந்த நிலத்தை பயன்படுத்து வது, எந்த நிலத்தை பாதுகாப்பது போன்ற புரிதலை ஏற்படுத்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நகர பகுதிகளில் வெப்பத்தை குறைக்கவும், பசுமை பரப்பை அதிகரிக்கவும் ஆய்வுகள் நடைபெற்று வருவதுடன், இந்த மாநாட்டில் அது குறித்து விவாதிக்கப்படும்.
தமிழ்நாட்டை ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தல் தலைநகரமாக மாற்ற தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
வெளிமாநில குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்
காஞ்சி தனியார் மருத்துவ ஆலைக்கு தாக்கீது
சிறீபெரும்புதூர், அக்.8 வெளிமாநிலக் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சுங்குவார் சத்திரம் மருந்து ஆலைக்கு தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், சிறீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் தனியார் மருந்து உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்டதால் வெளிமாநிலக் குழந்தைகள் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் கேட்டு வாயிலில் தாக்கீது ஒட்டப்பட்டது. ஆலை பூட்டப்பட்டிருந்ததால் ஆலைக் கதவில் ஒட்டப்பட்டது.
10 குழந்தைகள் உயிரிழப்பு
இந்த ஆலையில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் இருமல் மருந்தை உட்கொண்ட ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த பல குழந்தைகளுக்கு அடுத்தடுத்து உடல் நலக் குறைவு ஏற்பட்டதோடு, 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர்.
குழந்தைகளின் உயிரிழப்புகளுக்கு இந்த இருமல் மருந்து தான் காரணம் என்று ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, தங்கள் மாநிலங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தீவிர நடவடிக்கை எடுக்கக் கோரி சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தமிழ்நாடு அரசை வலியுறுத்தின.
இந்த புகாரின் அடிப்படையில், கடந்த 3-ஆம் தேதி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களின் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் மருந்து உற்பத்தி ஆலைக்கு வந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆலை வளாகம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், மருந்து தயாரிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள்கள், தயாரிக்கப்பட்ட மருந்தின் மாதிரிகளைப் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், இந்த முக்கிய விவகாரம் குறித்து ஆலை நிர்வாகத்திடம் விளக்கம் கோர, காஞ்சிபுரம் மண்டல மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி மணிமேகலை நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் இந்த ஆலைக்குச் சென்றபோது ஆலை பூட்டப்படிருந்ததால், இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் கோரும் தாக்கீதை ஆலையின் வாயிலில் ஒட்டினார்.
தயாரிக்கப்பட்ட மருந்தில் ஏதேனும் தரக் குறைபாடு (Sub-standard quality) இருந்ததா அல்லது மருந்து தயாரிப்பு விதிமுறைகள் மீறப்பட்டதா என்பது தொடர்பாகவும், மருந்து தயாரிப்பின்போது பின்பற்றப்பட்ட தரக் கட்டுப்பாடு நடைமுறைகள், மூலப்பொருள்கள் கொள்முதல் ஆவணங்கள், சோதனை அறிக்கைகள் உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய ஆவணங்களையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த தாக்கீதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தச் சம்பவம் குறித்துக் கேட்கப்பட்ட விளக்கத்தை திருப்திகரமாக அளிக்கத் தவறினால், மருந்து மற்றும் அழகு சாதனப் பொருள் சட்டம் மற்றும் விதிகளின்படி, ஆலையின் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
குரூப் 2, 2A உத்தேச விடை குறிப்புகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி
குரூப் 2, 2A உத்தேச விடை குறிப்புகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. ஆட்சேபனைகளை தக்க ஆதாரங்களுடன் 14ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம். Answer Key Challenge என்ற சாளரத்தைப் பயன்படுத்தி மட்டுமே முறையீடு செய்யலாம்.