சென்னை, அக்.2- கரூர் துயரச் சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமி அரசியல் லாபம் பெற துடிக்கிறார் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கரூரில் நடந்த துயரச் சம்பவத்தில் எப்படியாவது அரசியல் லாபம் பார்க்க முடியுமா என துடிப்பதைக் காண முடிகிறது, செய்தியாளர் சந்திப்பில் உண்மைகள் உணர்த்தப்பட்டபோது அதைத் தாங்க முடியாமல் அவர் உளறல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதிகாரிகளின் விளக்கம் தவறல்ல:
“கரூரில் நடந்த கொடுந்துயரத்திற்குக் காரணம் என்னவென்பதை அரசு அமைத்துள்ள ஆணையமும் காவல் துறை விசாரணையும் முறையாக வெளிக்கொணரும் எனச் செய்தியாளர்களிடம் அரசு அதிகாரிகள் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர். ஒரு பெரும் துயரச் சம்பவம் குறித்த உண்மை நிலவரங்களை அரசின் உயர் அலுவலர்கள் நாட்டு மக்களுக்கு விளக்கிச் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?” அரசின் முக்கிய அங்கமாக விளங்கும் அதிகாரிகள், பொறுப்புணர்வுடன் அத்தகு விளக்கங்களைச் செய்தியாளர்கள் வாயிலாக மக்களுக்குச் சென்றடையச் செய்வது இத்தகுச் சூழலில் அவர்களின் கடமை என்பதை எதிர்க்கட்சித் தலைவர் வசதிக்காக மறந்துவிட்டு அறிக்கை வெளியிட்டு இருப்பதாக தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
வெளிப்படைத்தன்மையுடன் இயங்கும் அரசு: நள்ளிரவில் செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டு, மக்களிடம் விளக்கமளிக்காமல் ஓடி ஒளியும் அதிமுக அரசைப் போல இல்லாமல், வெளிப்படைத் தன்மையுடன் இயங்கும் அரசு இது என்பதை எடப்பாடி பழனிச்சாமி முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.