சென்னை, செப். 27- காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் காலாண்டுத் தேர்வு நடத்தப்படும்.
அந்தவகையில் நடப்பு கல்வியாண்டில் காலாண்டுத் தேர்வுகள் கடந்த 10ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தன. இதை யடுத்து மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இன்று (செப்.27) முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் அக்.6ஆம் தேதி திறக்கப்பட இருக்கின்றன. இந்நிலையில் காலாண்டு விடுப்பில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி, விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அவற்றை மீறும் பள்ளிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. எனினும், சென்னை உட்பட சில மாவட்ட ங்களில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியு ள்ளன.