சென்னை, செப். 24- ‘தொகுதியில் வாரத்தில் 4 நாட்கள் தங்கியிருந்து மக்கள் பணியாற்றுவதுடன், 15 நாள்களுக்கு ஒரு முறை ஆற்றிய பணிகள் குறித்த அறிக்கையையும். அளிக்க வேண்டும்’ என்று தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்
சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் கூட்டம் நேற்று (23.9.2025) நடந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில், பலவீனமாக உள்ள வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்டவற்றை இணைந்து செயல்படுவது, ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதி.ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப் பட்டது.
நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடர் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. இது சுமார் ஒன்றரை மாத காலம் நடைபெறும். இந்த கூட்டத்தில் ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்தும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்தும் எம்.பி.க்கள் விவாதிக்கவேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது. இக் கூட்டம் 40 நிமிடங்கள் நடந்தது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
கூட்டத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-
மாநிலம் முழுவதும் தற்போது நடந்து வரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’, போன்ற முகாம்களில் கலந்து கொண்டு, மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிய வேண்டும்.
அத்துடன் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற வேண் டும். அதேபோல், ‘கலைஞர்’ மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில்’ விடுபட்டவர்களை சேர்க்கும் வகையில் மேற்காணும் முகாம்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தகுதியுள்ள பெண்கள் அனைவருக்கும் உரிமைத் தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மக்களை சந்தித்து குறைகள்
கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த நாடாளு மன்றத் தேர்த லில் தி.மு.க. கூட்டணி 40-க்கு 40 தொகுதிகளை வென்று வரலாற்று சாதனை படைத்தது. அதற்குநமது சட்டமன்ற உறுப்பினர்கள் அரும்பாடுபட்டார்கள் அதேபோல், வருகிற சட்ட மன்றத் தேர்தலில் எம்.பி.க்கள் அனைவரும் சட்டமன்ற உறுப்பினர்களின் வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை தொடர்ச்சியாக சந்தித்து, அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்து அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர்கள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர் கள், தொகுதி பார்வை யாளர்கள் ஒருங்கிணைந்து கட்சிப் பணியாற்ற வேண்டும்.
15 நாள்களுக்கு ஒரு முறை அறிக்கை
நாடாளுமன்றம் நடைபெறும் நாட்களை தவிர்த்து, குறைந்தது வாரத்தில் 4 நாள்கள் தங்கள் தொகுதியில் தங்கி மக்களை சந்தித்து, அவர்களுக்கான தேவையானப் பணிகளை செய்ய வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பி னர்கள் அனைவரும், தங்கள் தொகுதியில் ஆற்றிய மக்கள் பணிகள், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு மக்களின் நலனை காத்திடும் வகையில் எடுத்துரைத்த கருத்துகள் ஆகியவை பற்றிய அறிக்கையை 15 நாள்களுக்கு ஒரு முறை அளிக்கவேண்டும். அத்துடன், ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்பு
கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரை முருகன், நாடாளுமன்ற உறுப்பி னர்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பி னர்களும் கலந்து கொண்டனர்.
இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஜூலை 18ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டம் தொடங்குவதற்கு முன்ன தாக தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத் தக்கது.