பேராசிரியர் நாகநாதன்
ஆண்டுதோறும் அறிஞர் அண்ணா
ஆளுமையை எண்ணி எண்ணி
எழுதி, எழுதி வியப்பில் மூழ்குகிறேன்!
கவிஞர் கண்ணதாசன்
1950களில் கணித்த கவிதை வரிகள் நூற்றுக்கு நூறு உண்மை என்பதைக் காலம் உண்மை என உணர்த்துகிறது.
” குன்றாத மனவளத்தான்; கவிதைப் செல்வன்;
குறைவுபடா எழுத்தாளன்; அறிவுத் தோட்டம்;
அன்றாடம் விடுதலையில் வரைந்த சொல்லால்
அறிவுலகப் பாதையிலோர் புதுமை கண்டோன்;”
அண்ணா அள்ள அள்ள
குறையாத அறிவு நிதியம்!
அறிவுத் தளத்தில் பயணம்!
அரசியலிலும் பயணம்!
இரண்டையும் இணைத்தே
கழகம் கண்டார் 1949இல் அண்ணா!
பெரியாரிடம் இருந்து பிரிந்தார்!
பெரியாரியத்தைப் பின்பற்றினார்.
1967 இல் ‘தி.மு.க. ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை’ என்று சட்டமன்றத்தில் முழங்கினார் அண்ணா.
அதனால் தான் 93 அகவையிலும் அரிமாவாக வலம் வரும் ஆசிரியர் வீரமணியார் தலைமையில் இயங்கும் திராவிடர் கழகமும், திராவிடச் செம்மல் தலைமையில் இயங்கும் திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக இயங்கி ஸனாதன சதிக்கூட்டத்தை முறியடித்து வருகின்றன.
75 ஆண்டுகளாக அண்ணா கண்ட தி.மு.க. பயணம் தொடர்கிறது!
கலைஞர் ஆட்சி அமைந்து 5 முறை அடுக்ககடுக்கான சாதனைகள்!
சமூகத்தையும் பொருளாதாரத்தையும் உயர்த்திய எண்ணற்ற திட்டங்கள்!
2021 இல் திராவிடச் செம்மல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் தி.மு.க. ஆட்சி 6ஆவது முறையாக அமைந்து ஏழை எளியோர் ஏற்றம் பெற எண்ணற்ற திட்டங்கள்!
அறிஞர் அண்ணா ஒரு தொலைநோக்குக் கொண்ட பெரும் சிந்தனையாளர்!
அண்ணா குறிப்பிட்ட கருத்துகள் எண்ணிலடங்கா!
அவற்றில் ஒரு சில கருத்துகள் இன்றும் நாட்டின் ஏற்றத்திற்கு ஏணிப்படிகள் போன்றுள்ளன.
செல்வக் குவிப்பு சிலரிடம் நாட்டையே அழித்து விடும் என்றார் அறிஞர் அண்ணா தனது இறுதி கடிதத்தில்!
“வெள்ளம் அழித்திடும்,
வாய்க்கால் வளமூட்டும்;
செல்வம் சிலரிடம் சென்றுக்
குவிந்திடுவது வெள்ளத்துக்கு
ஒப்பானது.
அது கொண்டவனையும்
அழித்துவிடும்.
சமூகத்தில் வலிவற்றோரையும் அழித்துவிடும்.
எனவேதான் சிந்தனையாளர்,
செல்வம் பெருக்கிட வேண்டும்.அது
முடக்கப்படாமல் சமூகம்
முழுவதற்கும் பயனளிக்கக்கூடிய
வழிமுறை கண்டாக வேண்டும்’’
என்று எடுத்துக் கூறினர்.”
சமூகத்தில் ஏற்ற, தாழ்வினை இன்றைய பொருளாதாரம் பெருக்கி வருகிறது என்பதை அன்றே அண்ணா கணித்துள்ளார்.
1950 ஆம் ஆண்டில் அண்ணாவைச் சந்தித்த சில வட மாநிலத் தலைவர்களிடம் உரையாடல் நிகழ்த்தும்போது:
இந்தி ஒருபோதும் இந்தியர்களை இணைக்கும் மொழியாக இருந்ததும் இல்லை. இருக்கப் போவதும் இல்லை என்ற கருத்தை அண்ணா வலியுறுத்தினார்.
அப்போது திராவிட நாடு பிரிவினையைக் கோரியதால் தென்னக மாநிலங்களில் எவ்வித மொழிக் கொள்கை அமையும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
தென்னக மாநிலங்கள் அந்தந்த தாய் மொழிகளை அந்தந்த மாநிலங்களில் ஆட்சி மொழியாக ஏற்கும். ஆங்கிலம் நான்கு மாநிலங்களுக்கும், உலகிற்கும் இணைப்பு மொழியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
(English will continue as a Federal and International language )
ஒன்றிய அரசால் நடைமுறைப்படுத்தப்படும் சரக்கு சேவை வரி உருவாக்கும் குழப்பங்கள் எத்தனை!
எத்தனை மாற்றங்கள்!
ஒரே வரியில் அண்ணா குறிப்பிட்டுள்ளார்.
Colossal Taxation and Meagre return.
மிகப் பெரிய வரி விதிப்பு முறை குறைந்த அளவில் பயன்.
முதலாளித்துவ முறையைப் பற்றிக் குறிப்பிடும்போது –
“மூலதனம் தேவை முதலாளித்துவம் தேவையற்றது.
Capital is needed not Capitalism.
அறிஞர் அண்ணா உடல் நலிவுற்ற நிலையில் 1968 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற விவாதத்தின்போது ,
அப்போதைய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கே. விநாயகம் Your days are numbered என்று குறிப்பிட்ட போது My steps are measured என்றார் அண்ணா.
உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன.
எனது அடிகள் (நடந்துசெல்லும் அரசியல் முறை) அளந்து வைக்கப்படுகின்றன.
புதுதில்லி பேராதிக்க ஆட்சி, எல்லா வகையிலும் எல்லா முறைகளிலும் மக்கள் உரிமைகளை மாநில உரிமைகளைக் காலம் தோறும் பறிக்கும் ஜனநாயக விரோதச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
அறிஞர் அண்ணா இவ்வித ஆதிக்கம் நிறைந்த அரசியல் முறைக்கு எதிராகத் தான் தனது வாழ்நாள் முழுவதும் களம் கண்டார்.
எனவே அறிஞர் அண்ணா வழியில் நெறி சார்ந்த அரசியலை மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும்.
மாநிலங்கள் தன்னுரிமைப் பெறவேண்டும்.
கூட்டாட்சி ஜனநாயகம் இந்தியாவில் மலர வேண்டும்.