வாசிங்டன், செப். 23- விசா கட்டண உயர்வு அறிவிப்பு வெளியானபோது, இந்தியாவுக்கு புறப்பட்ட மென்பொறியாளர்கள் பலரும் விமானத்தில் இருந்து கீழே இறங்கி சென்ற காட்சிப் பதிவுகள் தற்போது வேகமாகப் பரவி வருகின்றன.
விசா கட்டண உயர்வு
அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் எச்-1பி விசாவுக்கான கட்டணத்தை 1 லட்சம் டாலராக (சுமார் ரூ.88 லட்சம்) டிரம்ப் நிர்வாகம் அதிகரித்து உள்ளது.
புதிதாக இந்த விசாவுக்கு விண்ணப்பிக்கும் மற்ற நாட்டினர் இந்த தொகையை செலுத்த வேண்டும். அமெரிக்காவின் கெடுபிடி மற்ற நாட்டு தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எச்-1பி விசாக்களை அதிகமாக இந்தியர்கள் பெற்று வருவதால் டிரம்பின் இந்த அறிவிப்பு இந்தியர்களுக்கு பேரிடியாக அமைந்து இருக்கிறது.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ் கோவில் இருந்து கடந்த 19ஆம் தேதி இந்தியாவுக்கு எமிரேட்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் இந்திய மென்பொறியாளர்கள் அதிக அளவில் இருந்தனர். அப்போது எச்1பி விசாவுக்கான கட்டணம் ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதையறிந்த இந்திய மென்பொறியாளர்கள் பலரும் விமானத்தில் இருந்து உடனடியாக கீழே இறங்கினர். பயணத்தை ரத்து செய்துவிட்டு வீடுகளுக்கு திரும்பினர்.
காட்சிப் பதிவு
விமானத்தில் இருந்த பயணி ஒருவர் இதுதொடர்பான காட்சி களை தனது கைப்பேசியில் படம் பிடித்து சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.
‘‘மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்ப முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இந்தியப் பயணிகள் அவசரமாக வெளியேறிவிட்டனர்’’ என்று அதில் அவர் தெரிவித்துள்ளார். மற்றொரு காட்சிப்பதிவில், பயணிகள் நடைபாதையில் குழப்பத்துடன் நிற்பதையும், சிலர் விசா கட்டணம் தொடர்பான தகவலை அறிய தங்களது கைப்பேசிகளை பதற்றத்துடன் பயன்படுத்தியதையும் பார்க்க முடிந்தது.
இந்தியப் பயணிகளின் இக் கட்டான சூழலை புரிந்துகொண்ட விமான கேப்டன் கூறும்போது, ‘‘அன்பான பயணிகளுக்கு! முன்னெப்போதும் இல்லாத புதிய சூழலை எதிர்கொண்டுள்ளோம். பல பயணிகள் எங்களுடன் பய ணிக்க விரும்பவில்லை என்பதை அறிகிறோம். இந்தியாவுக்கு விமானம் புறப்படுவதற்கு முன்பு யார் வேண்டுமானாலும் இறங்கிச் செல்லலாம்’’ என்று அறிவித்தார். இந்த குழப்பத்தால் எமிரேட்ஸ் விமானம் சுமார் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.