முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு
சென்னை, செப்.19– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
உயிருக்குப் போராடும் காசா, உலகம் கண்டு கொள்ளாமல் இருக்கக்கூடாது. காசாவில் அரங்கேறி வரும் கொடுமைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு அதிர்ந்து போயிருக்கிறேன்.
அங்கிருந்து வெளிவரும் ஒவ்வொரு காட்சியும் நெஞ்சைப் பதறச் செய்கிறது. பச்சிளம் குழந்தை களின் அழுகுரல், பட்டினியில் தவிக்கும் சிறார்கள், மருத்துவமனைகள் மீது நடத்தப்படும் குண்டுவீச்சு, அய்.நா. விசாரணை ஆணையமே அங்கு இனப்படுகொலை நடந்து வருவதாக அளித்துள்ள அறிக்கை ஆகிய அனைத்தும், எந்த மனிதரும் எப்போதும் அனுபவிக்கக் கூடாத துன்பங்களை அங்கு அனுபவித்து வருவதையே காட்டுகிறது. அப்பாவி மனித உயிர்கள் இப்படி கொல்லப்படும் போது அமைதியாக இருப்பது என்பது ஒரு தேர்வாக இருக்க முடியாது. நம் ஒவ்வொருவரின் மனசாட்சியும் விழிக்க வேண்டும்.
இந்தியா உறுதியான நிலைப்பாட்டோடு பேச வேண்டும். உலகம் மொத்தமும் ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.