கோவை, செப்.19 கோவை நேரு கல்வி குழுமத்தில் தேசிய கண்டுபிடிப்பாளர் மாநாடு நேற்று (18.9.2025) நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக இஸ்ரோ தலைவர் நாராயணன் விமானம் மூலம் கோவை வந்தார்.
கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இஸ்ரோ ககன்யான் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த திட்டமானது 2018-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த திட்டம். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக்குள் ஆளில்லாத ராக்கெட் அனுப்ப திட்டமிட்டுள்ளோம். அதில் ஏ.அய். தொழில்நுட்பத்துடன் கூடிய வயோமித்ரா என்ற மனித வடிவ ரோபோவை அனுப்ப உள்ளோம். இது முடிந்தவுடன் 2 ஆளில்லா ராக்கெட்களை அனுப்ப உள்ளோம்.
2027-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப உள்ளோம். ககன்யான் திட்டத்தில் 85 சதவீதம் சோதனைகள் நிறைவு பெற்று உள்ளது. மனிதர்களை அனுப்புவதற்கு பல்வேறு கட்ட சோதனைகள் மேற்கொள்ள வேண்டும். ராக்கெட்டில் விபத்து நடந்தால் மனிதர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதையும் ஆய்வு செய்து வருகிறோம்.
இஸ்ரோ மட்டுமல்லாமல் ஏரோ, நேவி உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்கிறார்கள். உலகத்தில் 9 இடங்களில் நாம் முதலிடத்தில் இருக்கிறோம். நிலவில் இருக்கக்கூடிய கேமராவில் சிறந்த கேமரா நமது நாட்டின் கேமரா தான். செவ்வாய் கிரகத்துக்கு செயற்கை கோளை அனுப்புவதிலும் வெற்றி அடைந்த முதல் நாடு இந்தியாதான். ராக்கெட் என்ஜினிலும் சாதனைகளை படைத்துள்ளோம். நமது நாட்டில் மாணவர்கள் அனைவரும் விண்வெளி சார்ந்த விஷயங்களில் ஆர்வமாக உள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் விண்வெளித்துறையிலும் வந்துவிட்டது. வயோமித்ரா என்பதும் ஏ.அய். தொழில்நுட்பம் தான். சந்திரயான்-4 திட்டத்தில் நிலவில் மாதிரிகளை எடுத்து வருவதிலும் செயற்கை நுண்ணறிவு ரோபோ தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.