300 ஆண்டு பழமையான 40 கோடி ஆவணங்கள் பராமரிப்பு

2 Min Read

அமைச்சர் கோவி. செழியன் தகவல்

சென்னை, செப்.19 தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தால் 300 ஆண்டுகள் பழமையான 40 கோடிக்கும் அதிகமான ஆவணங்கள் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

தேசிய ஆவணக் காப்பகம், தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி மன்றம் சார்பில் 50-ஆவது தேசிய ஆவணக் காப்பாளர்கள் குழுக் கூட்டம் (பொன்விழா) சென்னையில் நேற்று (18.9.2025) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

புதிய இணையதளம்

‘ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக 1857-ம் ஆண்டுக்கு முன்பு தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்கள், தியாகங்கள்’, ‘மைசூர் போர்களும், தமிழ்நாடு கைப்பற்றப்பட்ட முறைகளும்’ ஆகிய 2 ஆங்கில நூல்களை அவர் வெளியிட்டார். மக்கள் வசதிக்காக பழமையான ஆவணங்கள் கணினிமயம் ஆக்கப்பட்டுள்ளன. அதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட www.digitamilnaduarchives.tn.gov.in என்ற இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.

விழாவில் அமைச்சர் கோவி. செழியன் பேசியதாவது: நாம் வாழ்ந்த வரலாற்றை நினைத்து செயல்படும் நாடுதான் உலகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும். புதியவற்றை மட்டுமே பின்பற்றி செல்லும் நாடு வரலாற்றை இழக்கும். இந்தியாவின் உண்மை வரலாற்றை ஆராய, ஆவணங்களை தேடி வரும் அறிஞர்களுக்கு, ஆதாரங்களை வழங்கும் ஆவணக் காப்பாளர் பணி முக்கியமானது. நாட்டில் பல்வேறு துறைகள் இருந்தாலும், அவற்றின் கோப்புகளைப் பாதுகாத்து, ஆவணக் காப்பகத் துறைதான் அவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்கிறது. அரசு நிர்வாகத்தின் முதுகெலும்புகளாக ஆவணங்கள் உள்ளன.

கடந்த 1805-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மிகவும் பழமையானது. இங்கு அனைத்து துறைகளின் ஆவணங்களும் அட்டவணைகள் தயாரிக்கப்பட்டு முறையாக பராமரிக்கப்படுகின்றன. தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தால் 300 ஆண்டுகள் பழமையான 40 கோடிக்கும் அதிகமான ஆவணங்கள் பாதுகாப்பாக பராமரிக்கப்படுகின்றன.

ஜப்பான் திசு முறையைப் பயன்படுத்தி பழமையான ஆவணங்களை செப்பனிடும் பணி ரூ.10 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில், தேசிய ஆவணக் காப்பக தலைமை இயக்குநர் சஞ்சய் ரஸ்தோகி, தமிழ்நாடு உயர்கல்வித் துறை செயலர் பொ.சங்கர், தமிழ்நாடு ஆவணக் காப்பக ஆணையர் ஹர்சஹாய் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *