ஜப்பானில் தொழிற்சாலைகளை பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்

Viduthalai
4 Min Read

அரசு, தமிழ்நாடு

ஒசாகா, மே 28 ஜப்பான் – இந்திய நட்புறவானது புதிய சகாப்தத்தை உருவாக்க வேண்டும் என்று ஒசாகாவில் கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.

ஒசாகாவில் நடைபெற்ற இந்திய மக்களின் கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் 

மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். 

சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். 

சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது ஜப்பானில் தமிழ்நாடு முதலமைச்சர் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக நேற்று (27.5.2023) ஒசாகாவில் உள்ள இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில், ஒசாகாவில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட இந்திய வம் சாவளியினரை தமிழ்நாடு முதலமைச்சர் 

மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார்

இந்தக் கலாச்சார சந்திப்பு நிகழ்வில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் ஜப்பான்
நாட்டைச் சேர்ந்த பரத நாட்டிய கலைஞர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். 

இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, ஜப்பான் நாட்டின் முதல் பரதநாட்டிய கலைஞரான 84 வயதான திருமதி அகிமி சகுராய் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார். 

இந்திய மக்களின் கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:

இந்தியத் தூதரகத்தின் சார்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள ஜப்பான் நாட்டின் ஒசாகாவிற்கான இந்திய கான்சுலேட் ஜெனரல் நிக்கிலேஷ் கிரி அவர்களுக்கும், உறுதுணையாக இருக்கும் தூதரக அதிகாரிகளுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏழு கோடி மக்கள் வாழும் தமிழ்நாட்டின் முதல மைச்சராக வந்துள்ளேன். இந்தியாவுக்கே பெருமையும், வளமும் சேர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டின் தொன்மையையும், பழைமையையும், கீழடியும், பொருநையும் இன்று உலகுக்கே அடையாளம் காட்டி வருகிறது. அப்படிப்பட்ட தமிழ்நாட்டின் முதல மைச்சராக உங்களை இங்கு சந்திக்க வந்திருக்கிறேன். 

அனைத்துத் தரப்பினரின் முன்னேற்றத்துக்காக செயலாற்றுகின்றோம்!

பெண்கள் அனைவருக்கும் நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் – அனைத்து மாணவர்களையும் அனைத்து தகுதியும் கொண்டவர்களாக மாற்றும் ‘நான் முதல்வன் திட்டம்’ –  பள்ளிகளில் மதிய சத்துணவோடு காலையிலும் உணவு என குழந்தைகள், மாணவர்கள்,  இளைஞர்கள், பெண்கள் ஆகிய அனைத்துத் தரப் பினரின் முன்னேற்றத்துக்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி செயலாற்றி வருகிறது.

எங்களின் இந்தத் திட்டங்களை இந்தியாவின் பிற மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கி இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான், தொழில் வளர்ச்சியிலும் கவனம் செலுத்தி வருகிறோம். அதற்காக வருகின்ற 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்றை மிகப்பெரிய அளவில் நடத்திட திட்ட மிட்டு இருக்கிறோம். அதற்கு அழைப்பு விடுக்கத்தான், இந்தச் சுற்றுப்பயணம். 

நிசான், தோஷிபா, யமஹா உள்ளிட்ட மிகப்பெரும் ஜப்பானிய நிறுவனங்கள், தங்கள் உற்பத்தித் திட் டங்களை தமிழ்நாட்டில் அமைத்துள்ளன. இந்தியா வுக்கும் – ஜப்பானுக்குமான நட்பு என்பது பரந்த அடிப் படையில் –  செயல் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று இந்திய அரசு நினைக்கிறது. வர்த்தக உறவுகளையும் தாண்டிய நட்புறவாக அவை அமைய வேண்டும். ஜப்பான் – இந்திய நட்புறவானது, புதிய சகாப்தத்தை உருவாக்க வேண்டும் என்பதை நானும் வலியுறுத்த விரும்புகிறேன். 

இரண்டு நாட்டிலும்  கலாச்சார விழாக்கள் நடைபெற்றன

2012 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் – ஜப்பானுக்கும் இடையே ஆன ராஜதந்திர உறவுகள் ஏற்பட்டு 60 ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. ‘மீண்டும் ஜப்பான் – துடிப்பான இந்தியா – புதிய பார்வைகள் – புதிய பரிமாற்றங்கள்’ என்று அதற்குத் தலைப்பு தரப்பட்டு இரண்டு நாட்டிலும் கலாச்சார விழாக்கள் நடைபெற்றன. 

இத்தகைய கலாச்சார தொடர்புகள் தொடர வேண் டும். ஜப்பானில் உள்ள இந்தியத் தூதரகமும், ஜப்பான் நாட்டின் ஒசாகாவிற்கான இந்திய கான்சுலேட் ஜெனரல் நிக்கிலேஷ் கிரி அவர்களும் சிறப்பாக பணியாற்றி, ஜப்பானில் உள்ள இந்திய சங்கங்களுக்கு இணைப்புப் பாலமாக இருப்பதற்குப் பாராட்டும், நன்றியும் தெரி வித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டை நோக்கி முதலீட்டாளர்களை அழைத்து வர வேண்டும்!

இதற்கு முன்பு, மேயர்கள் மாநாட்டுக்கு 1997 ஆம் ஆண்டும், சென்னை மக்களின் போக்குவரத்துத் தேவையை பூர்த்தி செய்வதற்கான மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு நிதி உதவி கேட்டு 2008 ஆம் ஆண்டும், நான் ஜப்பானுக்கு வந்திருக்கிறேன். அப்படிப்பட்ட ஜப்பான் நாட்டில் உள்ள முதலீட்டாளர்களிடம் தமிழ்நாட்டில் நிலவும் தொழில் தொடங்குவதற்கு ஏற்றச் சூழல், வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை நீங்கள் எல்லாம் எடுத்துக் கூறவேண்டும். தமிழ்நாட்டை நோக்கி முதலீட்டாளர்களை அழைத்து வர வேண்டும் என்று அன்போடுக் கேட்டு விடைபெறுகிறேன். 

நன்றி! வணக்கம்!

 – இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *