பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தகவல்
சென்னை, செப்.14 டெட் தேர்வு எழுத விரும்பும் ஆசிரியர்கள் தடையில்லா சான்று பெறத் தேவையில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதனால், தமிழ்நாட்டில் சுமார் 1.50 லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை தீவிர ஆலோசனை நடத்தியது. ஆசிரியர் சங்கங்களின் கருத்துகளும் கேட்டு பெறப் பட்டன. அதன் அடிப்படையில், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
தடையில்லா சான்று
இதற்கிடையே, இந்த ஆண்டுக்கான டெட் தேர்வு நவம்பர் 15, 16-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் 11 முதல் செப்டம்பர் 10-ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வு எழுத 4.80 லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக, பணியில் உள்ள ஆசிரியர்களில் பலர் இந்த முறை தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக கூறப் படுகிறது.
பொதுவாக, அரசுப் பணியில் இருப்ப வர்கள் உயர்கல்வி அல்லது வேறு பணி களுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்க, துறைசார்ந்து தடையில்லா சான்று பெற வேண்டும். இதனால், டெட் தேர்வுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் பலரும்தேர்வு எழுத அனுமதி கோரி முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், டெட் தேர்வு எழுத, ஆசிரியர்கள் தடையில்லா சான்று பெற வேண்டிய தேவையில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை ஆசிரியர்களுக்கு தெரிவிக் குமாறு முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினர்.
