சென்னை, செப்.13- இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி (11.9.2025), சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் உருவப்படத்திற்கு அக்கட்சித்தலைவர் திருமாவளவன் தலைமை யில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தென் மாவட்டங்களில் ஜாதிய வன்கொடுமைகள் கட்டுக்கடங்காமல் தலைவிரித்து ஆடுகிறது. ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். தனியாக உளவு கண்காணிப்பு பிரிவை உருவாக்க வேண்டும். அ.தி.மு.க.வில் குழப்பம் நிலவுவதற்கு பா.ஜனதா தான் காரணம். சசிகலாவால் செயல்படமுடியாமல் போனதற்கும், ஓ.பன்னீர்செல்வம் தனிமையாக செல்வதற்கும், டி.டி.வி. தினகரன் தனிக்கட்சி தொடங்கியதற்கும் யார் காரணம்?. செங்கோட்டையன் அ.தி.மு.க. தலைமைக்கு எதிராக செயல்படுவதற்கு யார் காரணம் என்றால் இதற்கு எல்லாம் ஒரே பதில் பா.ஜனதாதான்.
அ.தி.மு.க. தலைவர்கள் சுதாரித்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.