ரூ.2 ஆயிரம் நோட்டு அறிமுகமும், திரும்பப் பெறலும் – பண மதிப்பின்மீது சந்தேகம் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

Viduthalai
1 Min Read

அரசியல்

மும்பை,மே30 – ரிசர்வ் வங்கி சமீபத்தில் புழக்கத்தில் இருந்த ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் மும்பை வந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், மேனாள் ஒன்றிய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டில் ஆட்சியும், கொள்கையும் அனைத்து அலைகளையும் தாங்கி நிற்கும் படகை உருவாக்க வேண்டும். அந்த வகையில் கடந்த 9 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது.

கொடுமை என்னவென்றால் அரசு தனது தவறுகளை சரிசெய்து அனைத்து மக்களுக்குமான ஆட்சியை செய்ய முயற்சி எடுக்கவில்லை.

ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அறிமுகப்படுத்தியது மற்றும் அதை திரும்பப் பெற்றது இந்திய பணத்தின் மீதான நேர்மை மற்றும் உறுதித்தன்மை மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2022-2023ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டில் வளர்ச்சி சதவீதம் முறையே 13.2, 6.3 மற்றும் 4.4 என சரிவை நோக்கி செல்கிறது. 2004ஆம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இருந்த சராசரி 9 சதவீத வளர்ச்சி விகிதத்தை எட்டுவது தற்போதைய நிலையில் வெகு தொலையில் உள்ளது.

அதிகரித்துவரும் வேலையில்லா திண்டாட்டம், தொடர் பணவீக்கத்தால் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் தடுமாற்றத்தில் இருக்கும் நலத்திட்டப்பணிகள் குறித்து மிக கடுமையான கேள்விகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளன. நாடு தழுவிய வேலையின்மை விகிதம் தற்போது 7.45 சதவீதமாக உள்ளது. விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் நுகர்வு குறைந்துள்ளது.

அதுமட்டும் இன்றி பொதுமக்களின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் அரசின் அச்சுறுத்தல் மற்றும் வழக்குகள் மூலம் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இயற்கை நீதிக்கு பதிலாக தற்போது புல்டோசர் நீதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

-இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *