சென்னை, செப்.11- ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையால் வழங்கப்பட்ட பழங்கால ஓலைச்சுவடிகளை பாதுகாத்திட ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
கொலோன் பல்கலைக்கழகம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்று திரும்பினார். அந்த வகையில் கடந்த 1-ஆம் தேதி ஜெர்மனி நாட்டின் கொலோன் பல்கலைக்கழகத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றிருந்தார்.
அந்த பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை நூலகம் பழந்தமிழ் இலக்கிய சுவடிகள், பல முதற்பதிப்புகள் என 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய தமிழ் நூல்களை கொண்டது. அந்த நூலகத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
பழங்கால ஓலைச்சுவடிகள்
அப்போது கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறை அவரிடம் பழங்கால ஓலைச்சுவடிகளை வழங்கியது. இதனை பாதுகாத்திட ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளையின் அறங்காவலர் ஆர்.பாலகிருஷ்ணன், இயக்குநர்கள் பிரகாஷ், சுந்தர் ஆகியோரை சென்னை தலைமை செயலகத்துக்கு வரவழைத்து அவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது தலைமை செயலாளர் முருகானந்தம் உள்பட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அய்ரோப்பாவில் தமிழியல் ஆய்வுகளுக்கான முக்கிய மய்யமான ஜெர்மனி நாட்டில் உள்ள கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறை தொடர்ந்து தொய்வின்றி இயங்கிட தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.1 கோடியே 25 லட்சம் உடனடியாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி உத்தரவிட்டு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.