பெண்கள் கல்வி கற்பதன் மூலம் மற்றவர்களுக்கு அவர்கள் உதவ முடியும் என சைக்கிள் பந்தய வீரர் விஷ்ணுராம் கூறினார்.
சென்னை அண்ணா நகரில், பெண் குழந்தைகள் கல்விக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கியது. இதை கூடுதல் டி.ஜி.பி.. சங்கர் மற்றும் இணை ஆணையர் ரம்யா கொடியசைதது துவக்கி வைத்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சைக்கிள் பந்தயம் மற்றும் மாரத்தான் வீரர் விஷ்ணுராம். இவர், பெண் குழந்தைகள் கல்வியின் முக்கியத்துவம் குறித்து உள்ளூர் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் அண்ணாநகர் டவா பூங்கா அருகே, பெண் குழந்தைகள் கல்விக்கான விழிப்புணர்வு தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்தியாவின் 4 எல்லைகளுக்குமான எனது பயணத்தை தொடங்குவதில் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். உற்சாகமாக உணர்கிறேன். விளையாட்டு மற்றும் உடற்தகுதி மீதான எனது ஆர்வமே என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது. இதைக்கண்டு மேலும் பல இளைஞர்கள் ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல் அல்லது வாகனம் ஓட்டுதல் போன்றவற்றின் மூலம் தங்களின் உடற்பயிற்சி சார்ந்த இலக்குகளை அடைவதற்காகத் தயாராகி வருகிறார்கள்.
என்னுடைய இந்த முயற்சி கின்னஸ் உலக சாதனை படைக்கும் முயற்சி மட்டுமல்ல. தான் உறுதியாக நம்பும் சமூகப் பணிகளில் ஒன்றான பெண் குழந்தைகளுக்கான கல்வியை ஆதரிப்பதும் ஆகும். பெண்களுக்கும் சமமான கல்வி கிடைக்கும் உரிமைக்காக டாக்டர் அம்பேத்கரின் வாதத்தில் இருந்தும் கல்வியை அவர் எப்படி நம்பினார் என்பதிலிருந்தும், எனக்கு உத்வேகம் கிடைக்கிறது.
கல்வி மூலம் பெண்கள் தங்களுடைய அதிகாரத்தைப் பெறுவது மட்டுமல்ல. மற்றவர்களுக்கு அதிகரமளிக்கவும், உதவி செய்யவும் முடியும். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக திரட்டப்படும் நிதி சென்னை மற்றும் கோயம்புத்தூர் அரசுப் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அளிக்கப்படும்” என்றார்.