ஆசைக்கு அளவில்லையா? சட்டமன்ற தேர்தலில் 50 தொகுதிகள் ஒதுக்க வேண்டும்! அ.தி.மு.க.விடம் பிஜேபி வலியுறுத்தல்

2 Min Read

சென்னை, செப். 7– சட்டப் பேரவைத் தேர்தலில் 50 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று பா.ஜ. கேட்டு வரும் நிலையில், நாற்பது தொகுதிகளை கொடுக்கிறோம். அதில் இருபதைத் தேர்ந்தெடுத்து சொல்லுங்கள் என அ.தி.மு.க. கூறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே இருக்கும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் சுற்றப் பயணம், மக்கள் சந்திப்பு என தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இதற்கிடையில், பாஜக கூட்டணி யில் தான் ஓரங்கட்டப்படுவதாக உணர்ந்த ஓ.பன்னிரசெல்வம், கூட்டணியில் இருந்து வெளியேறுவ தாக அறிவித்தார். ஆனால், அவரை மீண்டும் கூட்டணியில் இணைக்க பாஜக பெரிய அளவில் முயற்சிக்கவில்லை. இதற்கிடையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அமமுக வெளியேறுவதாக 2 நாட்கள் முன்பு டிடிவி தினகரன் அதிரடியாக அறிவித்தார். தொடர்ந்து, தவெக தலைமையில் 3ஆவது அணி அமையும் என்று கூறி பரபரப்பையும் ஏற்படுத்தினார். அதேநேரத்தில், பாமக, தேமுதிகவை கூட்டணியில் தக்கவைக்க பாஜக முயற்சித்து வருகிறது.

இச்சூழலில், அ.தி.மு.க.வுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வாரத்தையில் பாஜக மும்முரமாக ஈடுபட்டுள்ளது. தற்போதுவரை
அ.தி.மு.க. கூட்டணியில் பாஜக மட்டுமே இடம் பெற்றிருக்கும் நிலையில், மற்ற கட்சிகள் கூட்டணிக் குள் வருவதற்கு முன்பு, தங்களுக்கான தொகுதிகளை முன்கூட்டியே கேட்டுப் பெற்றுவிட வேண்டும் என்று பாஜக விரும்புகிறது.

50 தொகுதிகள் வேண்டும்

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4இல் வெற்றி பெற்ற நிலையில், தற்போது வாக்கு சதவீதம் உயர்ந்திருப்பதால், இம்முறை கூடுதலாக தொகுதிகளை கேட்டுப் பெற பாஜக திட்டமிட்டுள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, 50 தொகுதிகளை
அ.தி.மு.க.விடம் இருந்து பாஜக கேட்டுப் பெற விரும்புகிறது. ஆனால், கடந்த தேர்தலைப் போலவே இம்முறை யும் 20 முதல் 25 தொகுதிகளை மட்டும் வழங்க அதிமுக முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் 40 தொகுதிகளை கொடுத்து, அதிலிருந்து 20 தொகுதிகளை தேர்ந்தெடுக்குமாறு பாஜகவை அதிமுக நிர்பந்திப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாஜக மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “மொத்தம் 50 தொகுதிகள் வேண்டுமென
அ.தி.மு.க.விடம் வலியுறுத்தியுள்ளோம். ஆனால், வருவாய் மாவட்டத்துக்கு ஒரு தொகுதி என 40 தொகுதிகளை வழங்குகிறோம். அதிலிருந்து 20 தொகுதிகளை தேர்ந்தெடுத்துச் சொல்லுங்கள் எனவும், அ.தி.மு.க. எங்களிடம் கூறியுள்ளது.

அதுமட்டுமின்றி, வானதி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் குறிப்பிட்ட தொகுதிகளைப் பெற வேண்டுமென மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் முறையிட்டு வருகிறார்கள். அ.தி.மு.க.வும், பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை என்பதை ஆய்வு செய்து, அவற்றை பாஜகவுக்கு ஒதுக்க முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

எனினும், நாங்கள் முடிந்தவரையில் அதிகமான தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டுப் பெற முயற் சிப்போம். அதன் மூலம் கடந்த சட்டப்பேரவை தேர்தலை விட அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் பாஜகவுக்கு கிடைப்பார்கள் என நம்புகிறோம்” என்றார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *