அரவக்குறிச்சி, செப்.2- கரூர் மாவட்டம், அரவக் குறிச்சி, சீரங்ககவுண்டனூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் ஓவியா (7), சில தினங்களுக்கு முன் திண்டுக்கல் மாவட்டம், மார்க்கம்பட்டியில் மாமாவுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வேகத்தடை மீது ஏறி இறங்கிய போது தவறி கீழே விழுந்த ஓவியா பலத்த காயமடைந்து, கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ஓவியா மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் கூறினர்.
இதையடுத்து, பெற்றோர் சம்மதத்துடன் அவரது கண்கள், சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் கொடையாக வழங்கப்பட்டன. இதையடுத்து, சீரங்க கவுண்டனூரில் நடந்த இறுதி நிகழ்வில் அரசு சார்பில் வட்டாட்சியர் மகேந்திரன் மரியாதை செலுத்தினார். ஏழு வயது சிறுமியின் உடல் உறுப்புகள் கொடையாக வழங்கப்ட்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.