தி.மு.க. அரசு செலுத்தும் முக்கிய கவனம்! அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

1 Min Read

சென்னை, ஆக.31 தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

அறிக்கை என்ற பெயரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைத்து புளிப்பு காமெடி செய்து கொண்டிருக்கிறார். முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்கள் ஒவ்வொன்றும் தமிழ் நாட்டுக்கு முதலீடுகளைக் கொண்டு வந்து, தமிழ்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உறுதி செய்வதை புள்ளிவிவரங்களுடன் பல முறை அறிக்கையாகத் தந்திருக்கிறோம்.

அவர் கூட்டணி வைத்திருக்கும் பாஜகவின் ஒன்றிய அரசின் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களே தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சியை நிரூபித்து வருகின்றன. அதனைப் பொறுக்கமுடியாமல், வயிற்றெரிச்சல் கொண்டு மீண்டும் அறிக்கை விட்டி ருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அறியாமை

முதலமைச்சர் தனது அய்ரோப்பிய பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு, இதுவரை தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ள முதலீடுகள், வேலைவாய்ப்புகள் பற்றி செய்தியாளர்களிடம் தெளிவாக விளக்கியிருக்கிறார். தொழில் முதலீடுகள், பொருளாதார வளர்ச்சி இவை பற்றி அடிப்படை அறிவுகூட இல்லாதவர் நமக்கு எதிர்கட்சித் தலைவராக வாய்த்திருக்கும் அவல நிலையில், அவருடைய அறியாமை அறிக்கைக்கு பதிலளிப்பதைவிட, ஜெர்மனி-இங்கிலாந்து உள்ளிட்ட அய்ரோப்பிய நாடுகளின் முதலீட்டாளர்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு கூடுதல் முதலீடு கொண்டு வருவதில்தான் திராவிட மாடல் அரசு இப்போது கவனம் செலுத்துகிறது.

தான் முதலமைச்சராக இருந்தபோது வெளிநாடுகளுக்கு சென்று, ஸ்பூனில் போன்டா சாப்பிட்டதையே மிகப் பெரிய சாதனையாக கருதிக்கொண்டிருக்கும் பழனிசாமிக்கு முதலீடுகளை ஈர்ப்பதில் உள்ள நுணுக்கங்கள் பற்றி புரிதல் இல்லாததில் வியப்பொன்றுமில்லை.

தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நம் முதலமைச்சரின் இந்த அய்ரோப்பிய பயணமும், நம் மாநிலத்திற்கான முதலீடுகளாகவும் வேலைவாய்ப்புகளாகவும் மாறும்.

அப்போது எதிர்க்கட்சித்தலைவருக்கு கூடுதல் வயிற்றெரிச்சல் ஏற்பட்டால், தரமான சிகிச்சை அளிக்கும் மருத்துவக் கட்டமைப்பும் நம் திராவிட மாடல் அரசில் சிறப்பாக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *