மாநில முதலமைச்சர்கள் – பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

5 Min Read

ஒன்றுபட்ட உண்மையான கூட்டாட்சியை
அடிப்படையாகக் கொண்ட ஒன்றியத்தை வழங்குவோம்!

சென்னை, ஆக.30– “ஒன்றிய–மாநில அதிகாரங்களை மறுபரிசீலனை செய்து, உண்மையான கூட்டாட்சியை வலுப்படுத்தும் எதிர்கால கட்டமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயம்; இந்த முயற்சியில் அரசியல் மற்றும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் இணைந்து எதிர்காலச் சந்ததியினருக்கு வலுவான, ஒன்றுபட்ட மற்றும் உண்மையான கூட்டாட்சியை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஒன்றியத்தை வழங்குவோம்” என மாநில முதலமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய நாட்டின் கூட்டாட்சி அடித்த ளங்களை வலுப்படுத்துவதிலும், அனைத்து மாநிலங்களின் ஒட்டுமொத்த விருப்பத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இதற்கான ஒரு ஆவணத்தை வடிவமைப்பதிலும் மாநில முதலமைச்சர்களும், கட்சித் தலைவர்களும் தீவிரமாக பங்கேற்க வேண்டுமென்றும், தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஒன்றிய–மாநில உயர்நிலைக் குழுவின் இணையதளத்தில் உள்ள இணையவழி வினாத்தாள் படிவத்தினை ஆராய்ந்து, விரிவான பதில்களை அனுப்பி வைக்கு மாறும் கேட்டு, மற்ற மாநில முதல மைச்சர்களுக்கும், பல்வேறு கட்சித் தலைவர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (29.8.2025) கடிதம் எழுதியுள்ளார்.

ஒன்றியமும் – மாநிலங்களும் முரண்பட்டிருக்கக் கூடாது!

அக்கடிதத்தில், 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்திலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசமைப்பானது, ஒன்றியத்திற்கும், மாநிலங்களுக்கும் இடையில் சிறந்த தொரு அதிகார சமநிலையுடன் கூடிய கூட்டாட்சி கட்டமைப்பினை உரு வாக்கியது என்றும், இருப்பினும், பல ஆண்டுகளாக இந்த சமநிலை தொடர்ந்து மாற்றப்பட்டு வருவதாகவும், வலுவான ஒன்றியமும், வலுவான மாநிலங்களும் முரண்பட்டிருக்காமல், ஒன்றையொன்று சார்ந்து, ஒவ்வொன்றும் மற்றவற்றின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென்றும் முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

1967 ஆம் ஆண்டில், அன்புக்குரிய தலைவரும், அப்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சருமான அறிஞர் அண்ணா  அவர்கள், “இந்தியாவின் இறையாண்மை யையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் அளவுக்கு ஒன்றியம் வலுவாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த நாட்டின் பாதுகாப்பிற்கு ஒன்றியத்தைப் பொறுப்பேற்கச் செய்யத் தேவையான அனைத்து அதிகாரங்களும் ஒன்றியத்திடம் இருக்க வேண்டும்.

ஆனால், பாகிஸ்தானியர்களிடமிருந்தோ அல்லது சீனர்களிடமிருந்தோ இந்தியா வைப் பாதுகாக்க, ஒன்றிய அரசு இங்கு ஒரு சுகாதாரத் துறையை வைத்திருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. அது எந்த வகையில் இந்தியாவின் இறையாண்மையை வலுப்படுத்துகிறது? ஒன்றிய அரசிடம் கல்வித் துறை இருக்க வேண்டுமா? அங்குள்ள இராணுவ வீரர்களின் போர்த் திறனை அது எந்த வகையில் மேம்படுத்துகிறது?” என்றும் வினவியுள்ளதை தனது கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாநிலங்களுக்கு சுயாட்சி – ஒன்றியத்தில் கூட்டாட்சி!

அதேபோன்று, தலைவர் – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், “மாநிலங்களுக்கு சுயாட்சி, ஒன்றியத்தில் கூட்டாட்சி” என்ற கொள்கையைத் தொடர்ந்து ஆதரித்தார் என்றும், 1969 ஆம் ஆண்டு அவர் முதல மைச்சராக இருந்தபோது, ஒன்றிய–மாநில உறவுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளித்திட நீதிபதி பி.வி. ராஜமன்னார் தலைமையில் முதல் குழுவை அமைத்தார் என்றும் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,

1971 ஆம் ஆண்டு இந்தக் குழு அளித்த அறிக்கை, இந்தியாவில் கூட்டாட்சி குறித்த விவாதங்களை வடிவமைப்பதில் ஒரு மைல்கல்லாக அமைந்தது என்றும், 1974 ஆம் ஆண்டு, தமிழ்நாடு சட்டமன்றம், ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு, உண்மையான கூட்டாட்சி அமைப்புக்கு வழிவகுக்கும் வகையில் அரச மைப்பைத் திருத்துமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியது என்றும் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

பின்னர், ஒன்றிய அரசு சர்க்காரியா கமிஷன் (1983 – 1988) மற்றும் புஞ்சி கமிஷன் (2007 – 2010) ஆகியவற்றை அமைத்தது என்றும், இவை இரண்டும் அதிகாரப் பகிர்வு குறித்து விரிவான முறையில் ஆராய்ந்தன என்றாலும், அவற்றின் பரிந்துரைகள் உண்மையான, சமநிலையான கூட்டாட்சிக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு உதவிடவில்லை என்றும் தனது கடிதத்தில் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

மாநில முன்னுரிமைகளுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன!

இதற்கிடையில், தொடர்ச்சியான அரசியலமைப்புத் திருத்தங்கள், யூனியன் சட்டங்கள் மற்றும் ஒன்றியத்தின் கொள்கை கள், அதிகார சமநிலையை ஒன்றிய அரசுக்குச் சாதகமாகப் படிப்படியாக சாய்த்துள்ளன என்றும், ஒன்றிய அரசில்  உள்ள பெரிய அமைச்சகங்கள்  மாநிலங்களின் செயல்பாடுகளில் தலையிட்டு, நிதிக் குழு அளிக்கும் மானியங்களுக்கான நிபந்தனைகள், ஒன்றிய நிதியுதவி திட்டங்களுக்கான ஒரே மாதிரியான வழிகாட்டுதல்கள், பணி வாரியாக கட்டாய ஒப்புதல்கள் மற்றும் திட்டங்களைச் செயல்படுத்தும்போது அவற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர் கண்காணிப்பு போன்றவற்றின் மூலம் மாநில முன்னுரிமை களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன அல்லது ஆணைகளை வெளியிடுகின்றன என்றும் தனது கடிதத்தில் வருத்தத்துடன் முதலமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

உண்மையான கூட்டாட்சியை வலுப்படுத்தும் எதிர்கால கட்டமைப்பை உருவாக்குவதே காலத்தின் தேவை!

இன்றைக்கு நாம் ஒன்றிய–மாநில அதிகாரங்களில் உள்ள இந்த முன்னேற்றங் களை தீர்க்கமாக மறுபரிசீலனை செய்து, உண்மையான கூட்டாட்சியை வலுப்ப டுத்தும் எதிர்கால கட்டமைப்பை உருவாக்கு வதே காலத்தின் தேவை என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இந்த நோக்கத்தின் அடிப்படையில், ஒன்றிய–மாநில உறவு கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளித்திட, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் அவர்களைத் தலைவராகக் கொண்டும், ஓய்வுபெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி கே.அசோக் வரதன் ஷெட்டி மற்றும் மேனாள் திட்டக் குழுத் துணைத் தலைவர் பேராசிரியர் மு. நாக நாதன் ஆகியோரை  உறுப்பினர்களாகக் கொண்டும், உயர்நிலைக் குழு ஒன்றினை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

இக்குழுவின் பணி செம்மையுற அமையும் வகையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பரிசீலிக்கப்பட்ட கருத்துகளைப் பெறுவதற்கு ஏதுவாக, ஒரு கேள்வித்தாளை இக்குழு தயாரித்துள்ள தாகவும், கடந்த 23.8.2025 அன்று, ஒன்றிய–மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கில், உயர்நிலைக் குழுவின் இணையதளத்தினை தான் தொடங்கி வைத்து, இணையவழி வினாத்தாள் படிவத்தினை வெளியிட்டதாகவும், அதனை https://hlcusr.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம் என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டாட்சி அடித்தளத்தை வலுப்படுத்த ஒன்றிணைவோம்!

இந்த விஷயத்தில் மாநில முதலமைச்சர்க ளும், பல்வேறு கட்சித் தலைவர்களும் கவனம் செலுத்தி, உயர்நிலைக் குழுவின் வினாத்தாளினை ஆராய்ந்து, விரிவான பதில்களை வழங்கிட வேண்டுமென்றும், அனைத்து மாநிலங்களின் ஒட்டுமொத்த விருப்பத்தைப் பிரதிபலிக்கும் ஒரு ஆவணத்தை வடிவமைப்பதிலும், நமது நாட்டின் கூட்டாட்சி அடித்தளங்களை வலுப்படுத்துவதிலும் மாநில முதலமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்களின் தீவிர பங்கேற்பு மிக முக்கியமானதாக விளங்கும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

இந்த முயற்சி அரசியல் மற்றும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நிற்ப தாகவும், ஒன்றாக, நமது அரசியலமைப்பின் கூட்டாட்சி உணர்வைப் புதுப்பித்து, எதிர்காலச் சந்ததியினருக்கு வலுவான, ஒன்றுபட்ட மற்றும் உண்மையான கூட்டாட்சி கொண்ட ஒரு ஒன்றியத்தை வழங்குவோம் என்றும் தனது கடிதத்தில் மற்ற மாநில முதலமைச்சர்களையும், பல்வேறு கட்சித் தலைவர்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *