மின்சார வாரியம் தகவல்
சென்னை, ஆக.28- தடையில்லா மின்சாரம் மற்றும் மின்சார விபத்துகளை தவிர்ப்பதற்காக நடக்கும் பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் தலைமையிலான குழுக்களை தமிழ்நாடு மின்சார வாரியம் அமைத்துள்ளது.
தடையில்லா மின்சாரம்
பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வேளையில், தடையில்லா, தரமான மின்சாரத்தை உறுதி செய்யும் நோக்குடன் தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக சென்னையில் ஏற்பட்ட மின்சார விபத்துகள் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளை கருத்தில் கொண்டு, பல்வேறு பராமரிப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் வாரியம் முடுக்கிவிட்டு உள்ளது.
அதன் அடிப்படையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 618 திறந்த வெளியில் காணப்பட்ட பூமியில் புதைக்கப்பட்ட புதைவடக் கம்பிகள் மற்றும் இணைப்புகள் மண்ணில் புதைக்கப்பட்டு, இணைப்புகள் சரி செய்யப்பட்டு உள்ளன.
சீரமைப்புப் பணிகள்
பொதுமக்களால் சுட்டிக் காட்டப்பட்ட 633 இடங்களில் சீரமைப்புப் பணிகள் நடந்துவருகின்றன. மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்குவதால் ஏற்படும் மின்சார விபத்துகளை தவிர்க்க 1,148 மின்சார பகிர்மானப்பெட்டிகள் மற்றும் 127 மின்சார மாற்றிகள் பாதுகாப்பாக உயர்த்தப்பட்டு உள்ளன.
சென்னையை தவிர்த்து மாநிலத்தில் பிற பகுதிகளிலும் சீரமைப்புப் பணிகளுக்கு தேவையான மின் தடவாளப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. பொது இடங்களில் பந்தல்கள் மற்றும் தற்காலிக அமைப்புகளை நிறுவும் ஒப்பந்ததாரர்கள் போதிய பாதுகாப்பான இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிகாரிகள் குழு
சென்னை மாநகரில், குடிநீர் வாரியம், மாநகராட்சி உள்ளிட்ட பிற சேவை துறைகள் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளும் போது, பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குடியிருப்புகளில் மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள இடங்கள் மற்றும் சுவர்களுக்கு அருகில் செல்லும் புதைவடக்கம்பிகளில் ஏற்படக்கூடிய பழுது அல்லது மின்சாரக் கசிவு சம்பவங்களைத் தவிர்க்க தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மின்சார வாரிய அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
தடையில்லா மின்சார வினியோகம் உள்ளிட்ட பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் தலைமையிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மின்சாரத்துறை குறைபாடுகளை சரிசெய்ய 24 மணி நேரமும் செயல்படும் மின்னகம் 94987-94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையலாம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காலாண்டுத் தேர்வு
தேதியை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை
சென்னை, ஆக.28- பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் வெளியிட்டுள்ளனர்.
அதில், 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 15இல் தொடங்கி 26ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் இதே தேதிகளில் துவங்கி, காலாண்டு தேர்வு முடிவடையும்.
11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் செப்டம்பர் 10 ஆம் தேதி துவங்கி, 25ஆம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலையில் தேர்வுகள் நடைபெறும் எனவும், பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலில் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.