சென்னை, ஆக.23- அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப் பட்டதை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது.
கடந்த 2022 ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் திண்டுக்கல்லை சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து கடந்த ஜூலை மாதம் சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்ததுடன், சூரியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கின் விசார ணைக்கும் இடைக்கால தடை விதித்து உத்தர விட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப் பிக்கக் கூடாது என்று சூரியமூர்த்தி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன்பு நேற்று முன்தினம் (21.8.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் விஜய் நாராயண், சூரியமூர்த்தி கட்சியின் உறுப்பினர் அல்ல. இந்த வழக்கை தாக்கல் செய்ய அவருக்கு உரிமையில்லை என்று வாதிட்டார்.
சூரியமூர்த்தி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்
எம்.வேல்முருகன்,‘கேவியட் மனுதாக்கல் செய்துள்ளதை மறைத்து, தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் நீதி மன்றத்தை தவறாக பயன் படுத்தியுள்ளனர்,’ என்று வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, உரிமையியல் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வானதை எதிர்த்து சூரியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கின் விசார ணைக்கும், வழக்கை நிராகரிக்க மறுத்த உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்த உத்தரவை திரும்பப் பெற்ற நீதிபதி பாலாஜி, வழக்கின் விசாரணையை வரும் 25ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.