சென்னை, ஆக.22- தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் பலர் வசித்து வருகின்றனர். அந்த தமிழர்களுக்கு தேவையான வசதிகளை தமிழ்நாடு அரசு அளித்து வருகிறது.
இந்த நிலையில் நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துகுடி, தென்காசி, ராமநாதபுரம் மதுரை, திருவள்ளூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்கள் நேற்று (21.8.2025) சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர்.
அப்போது, மறுவாழ்வு முகாம்களில் வாழும் தமிழர்களின் நலனுக்காக நிதி உதவி, குடியுரிமை முயற்சிகள், அடிப்படை வசதிகள் மேம்பாடு போன்ற மறுவாழ்வுத்திட்டங்களுக்காக தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர் உடனிருந்தார்
தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு
செப்.4 வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஆக.22- தமிழ்நாட்டில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்த ‘தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு’ நடத்தப்பட்டு வருகிறது. 2025-2026ஆம் கல்வி ஆண்டுக்கான இந்த தேர்வு அக்டோபர் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை வழியாக மாதம் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளிலும் பிளஸ் 1 படிக்கும் (மெட்ரிக், சிபிஎஸ்இ, அய்சிஎஸ்இ) மாணவ, மாணவிகள் இந்த தேர்வு எழுத தகுதிவுடையவர்கள். www.dge.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் இன்று முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். செப்டம்பர் 4ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.