சென்னை, ஆக.22- காஞ்சிபுரம் தேவராஜ சாமி கோவிலில் உள்ள குலசேகரப்படியில் பொருத்துவதற்காக விஸ்வநாத் என்பவர் வெள்ளிக்கவசத்தைக் கொடையாக வழங்கினார். சங்கு சக்கரத்திற்கு நடுவில் ஆதிசேஷனுடன் பொறிக்கப்பட்டிருந்த இந்தக் கவசத்தின் நடுவில் வடகலை நாமத்தைப் பொறிக்க உத்தரவிட வேண்டும் என வடகலை சிறீ வைஷ்ணவ சம்பிரதாய சபை சார்பில் இந்து சமய அறநிலையத்துறைக்கு மனு கொடுக்கப்பட்டது. இதை அறநிலையத்துறை ஏற்க மறுத்து உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், 2016 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ‘‘தேவையில்லாத சர்ச்சைகளை தவிர்க்க அறநிலையத்துறை இந்த முடிவை எடுத்துள்ளது. அதனால், அறநிலையத்துறை உத்தரவில் தலையிட முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடர வேண்டும். அதனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். மேலும், வைணவ சமயத்தில் வடகலை, தென்கலை மோதல் விவகாரம் கவனமுடன் கையாள வேண்டிய தீவிரமான பிரச்சினையாகும். இந்தப் பிரச்சினைக்கு முற்றுப் பெறாமல் நீடிக்கும் பிரச்சினையாக இருக்கிறது’’ என்று உத்தரவிட்டார்.