அண்மையில், ‘நிசார்’ செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. அடுத்து, அமெரிக்கா உருவாக்கிய, 6,500 கிலோ எடையுள்ள ‘ப்ளூபேர்ட்’ (BlueBird) என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ தயாராகிறது.
அதிநவீன ‘எல்.வி. எம்.-3-எம்-5′ ராக்கெட் மூலம் இந்தச் செயற்கைக்கோளை ஏவ இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர். இதனால், பன்னாட்டு விண்வெளிச் சந்தையில் இஸ்ரோவின் நம்பகத்தன்மை அதிகரிக்கும்.
‘ப்ளூபேர்ட்’ செயற்கைக்கோளில், புரட்சிகரமான தொழில்நுட்பம் உள்ளது.
எந்தவொரு சிறப்புக் கருவியும் இல்லாமல், சாதாரண அலைபேசிகளுக்கு, செயற்கைக் கோளிலிருந்தே, நேரடியாக அதிவேக இணைய இணைப்பை வழங்குவதே இதன் தனிச்சிறப்பு.
‘ப்ளூபேர்டின்’ 64 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட பிரமாண்டமான ஆன்டெனா, தொலைதுாரக் கிராமங்களில் இருப்போரின் அலை பேசி களுக்கும் நேரடியாக இணைய சேவையை வழங்கும்.
அமெரிக்காவின் இவ்வளவு பெரிய, முக்கியமான செயற்கைக்கோளை இஸ்ரோ ஏவுவது, இரு நாடுகளுக்கும் இடையேயான விண்வெளி ஒத்துழைப்பைப் வலுப்படுத்தும்.
இது இந்தியாவின் தொழில்நுட்ப ஆற்றலுக்கு ஒரு சான்றாக இருப்பதோடு, உலக விண்வெளித் தொழில்நுட்ப சந்தையில், இந்தியாவின் முக்கியத்துவத்தையும் உலகிற்கு உணர்த்துகிறது.