மகாராட்டிரா வங்கி தேசிய அளவில் 500 அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் ஆகஸ்ட் 13 முதல் தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 30 வரை விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொள்ளலாம்.
வங்கி பணியின் விவரங்கள்: பொது அதிகாரி (Generalist Officer) – 500
இவை எஸ்சி – 75, எஸ்டி – 37, ஒபிசி – 135, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் – 50, பொதுப் பிரிவு – 203 என்ற அடிப்படையில் நிரப்பப்படுகிறது. இதில் 20 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புனேவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மகாராட்டிரா வங்கி, நாடு முழுவதும் 2,600 கிளைகள் கொண்டு இயங்கிறது. இந்நிலையில், நிலை – 2 கீழ் பொது அதிகாரி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு: மகாராட்டிரா வங்கியில் உள்ள பொது அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் குறைந்தபட்சம் 22 வயது இருக்க வேண்டும். மேலும், அதிகபடியாக 35 வயது வரை இருக்கலாம். வயது வரம்பில் ஒன்றிய அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, எஸ்சி, எஸ்டி, ஒபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தளர்வு உள்ளது.
கல்வித்தகுதி: வங்கி அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பட்டப்படிப்பு கல்வியை 60% தேர்ச்சியுடன் முடித்திருக்க வேண்டும். இதில் எஸ்சி, எஸ்டி, ஒபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகள் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பட்டயக் கணக்காளர் தகுதி பெற்றிருக்க வேண்டும். CMA / CFA / ICWA பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், விண்ணப்பதார்கள் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்: இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத அடிப்படை ஊதியமாக ரூ.64,820 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொது அதிகாரி பதவிகளுக்கு ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: மகாராட்டிரா வங்கியில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் இணைய வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இணைய வழி எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்காணலுக்கு தகுதி பெறுவார்கள். இரண்டிலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தெரிவு பட்டியல் வெளியாகும். குறைந்தபட்ச தேர்ச்சியாக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், பொதுப் பிரிவினர் 50% மதிப்பெண்கள், இதர பிரிவினர் 45% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தயராக இருக்கும் நபர்கள் https://bankofmaharashtra.in/current-openings என்ற இணையதளத்தில் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,180 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.118 செலுத்த வேண்டும். இதற்கான தேர்வு மய்யம் சென்னையில் அமைக்கப்படும். இணைய வழியாக ஆகஸ்ட் 30 வரை விண்ணப்பிக்கலாம். அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.08.2025