சரியான பதிலடி! அவதூறுகளைப் பரப்பி தமிழ்நாட்டு மக்களின் மொழி இன உணர்வை அழியாமல் பார்த்துக் கொள்பவர் ஆளுநர் ஆர். என்.ரவி! தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

தருமபுரி, ஆக. 18 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (17.8.2025) தருமபுரியில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றுகையில், “அவதூறுகளைப் பரப்பி தமிழ்நாட்டு மக்களின் மொழி இன உணர்வை அழி யாமல் பார்த்துக் கொள்பவர் ஆளுநர் ஆர். என்.ரவி” என்று குறிப்பிட்டார்.

விழாவில், முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:–

தருமபுரி மாவட்ட அரசு விழாவில் பங்கேற்று சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடிய உங்கள் அனை வருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.

வரலாற்றுப் பெருமையும், எழில்மிக்க ஒகேனக்கல்லும் இருக்கும் இந்த தருமபுரி மாவட்டத்தில், 362 கோடியே 77 இலட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 73 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 512 கோடியே 52 இலட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 44 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 70 ஆயிரத்து 427 பேருக்கு 830 கோடியே 6 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்!

அரசுத் துறையில் சாதனை மேல் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்!

இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள், அவரை அனைவரும் வேங்கையின் மைந்தன்  என்று அழைப்பார்கள்; வேங்கையின் மைந்தனாக மட்டுமல்ல, வேளாண்மையின் மைந்தனாவும் – தமிழ்நாட்டின் மண்ணும், மக்களும் செழிக்க நாளும் உழைத்து, அரசுத் துறையில் சாதனை மேல் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்! அவருக்கும், அவருக்குத் துணை நிற்கக்கூடிய மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியர் சதீஷ் அவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் என்னுடைய பாராட்டுக்களை,வாழ்த்துகளை உங்கள் அனைவரின் சார்பில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு, இந்தியா விலேயே இல்லாத அளவுக்கு முதல் முறையாக ஒரு முக்கியமான திட்டத்தை வேளாண் பெருங்குடி மக்களுக்காக திறந்து வைத்துவிட்டு வந்திருக்கிறேன். விவசாயப் பெருங்குடி மக்கள் பயிர்க்கடன் பெறத் தொடர்புடைய தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு நேரடியாக சென்று விண்ணப்பித்து, அந்தக் கடனைப் பெற ஒரு வாரம் வரை காத்திருக்கின்ற நடைமுறைதான் இப்போது இருக்கிறது. இந்த நடைமுறையை மாற்றி, விவசாயிகள் நலன் கருதி காலதாமதத்தை தவிர்க்க, கூட்டுறவு வங்கிகளுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே, ஆன்லைன் மூலமாக பயிர்க்கடனுக்கு விண்ணப்பிக்கின்ற நடைமுறையையும், விண்ணப்பித்த அன்றைக்கே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பயிர்க்கடன் நேரடியாக வழங்குகின்ற நடைமுறையையும் இந்த தருமபுரியில், துவக்கி வைத்துவிட்டு இங்கே வந்திருக்கி றேன்.

தருமபுரியின் வளர்ச்சி என்றாலே, அது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் தான்! அந்தளவுக்கு ஏராளமான திட்டங்கள் நம்முடைய ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டி ருக்கிறது! ஒரே ஒரு எடுத்துக்காட்டை நான் சொல்ல வேண்டும் என்றால், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்!

தருமபுரி – கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 2008 இல் தலைவர் கலைஞர் உருவாக்கிய அந்தத் திட்டம், அன்றைக்கு உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த என்னுடைய மேற்பார்வையில்தான் நடைபெற்றது.

மூன்று நகராட்சிகள் – 16 பேரூராட்சிகள் – 7 ஆயிரத்து 639 ஊரக குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு குடிநீர் வழங்குகின்ற இந்த திட்டத்தை ஆயிரத்து தொள்ளா யிரத்து29 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் செயல்படுத்தினோம்!

இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை இப்போது நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், 7 ஆயிரத்து 890 கோடி ரூபாய் செலவில் செய்து கொண்டிருக்கிறோம்!

இந்த மாவட்ட மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கை யான சிப்காட் தொழில்பூங்கா திட்டம் இன்று திறக்கப்பட்டிருக்கிறது. தருமபுரி தொழில்பூங்காவுக்கு ஆரம்பகட்ட பணிகளான அணுகு சாலை மற்றும் நுழைவாயில்தகவல் பலகை, தெரு விளக்குகள் மற்றும் இதர பணிகள் அமைக்கும் பணி 12 கோடியே 39 இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் முடிக்கப்பட்டிருக்கிறது. இதில், அடுத்த கட்டமாக 200 ஏக்கர்பரப்பளவில் உட்கட்டமைப்புப் பணிகள், 93 கோடி ரூபாய்க்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு, இப்போது நடைபெற்று வருகிறது.

இப்போது, தருமபுரி சிப்காட் தொழில் பூங்காவில் இணையதளம் மூலமாக 200 ஏக்கர் நிலத்தில் தொழில் முனைவோர்களுக்காக நிலம் ஒதுக்கீடு செய்கின்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், 7 தொழில் நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டு, இன்று உங்களுடைய முன்னிலையில் வழங்கப்பட்டிருக்கிறது. இப்படி பல்வேறு திட்டங்கள் தருமபுரி மாவட்டத்திற்கு செய்து தரப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல, இந்த நான்காண்டு காலத்தில், இந்த மாவட்டத்திற்கு மட்டும் 447 கோடியே 26 இலட்சம் ரூபாயில், 43 இலட்சத்து 86 ஆயிரத்து 926 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி யிருக்கிறோம்!

பயனடைந்தவர்களின் பட்டியல் இதோ!

அதுமட்டுமல்ல, நம்முடைய ஆட்சியின் முத்திரைத் திட்டம் இருக்கிறது – அதில், தருமபுரி மாவட்டத்தில் பயனடைந்தவர்களின் பட்டியல் சொல்கிறேன். சிறிது பெரியதுதான்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 2 இலட்சத்து 84 ஆயிரத்து 91 பேருக்கு ஆயிரம் ரூபாய் வழங்குகிறோம்!

22 ஆயிரத்து 87 புதுமைப் பெண்களுக்கும் – 11 ஆயிரத்து 576 தமிழ்ப் புதல்வன்களுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிறோம்!

76 ஆயிரத்து 958 இளைஞர்களுக்கு நான் முதல்வன் என்ற திட்டத்தில் பயிற்சி கொடுத்து, அவர்களுடைய திறனை மேம்படுத்தியிருக்கிறோம்!

48 ஆயிரத்து 504 குழந்தைகள், காலை உணவுத் திட்டத்தில் சூடாக, சுவையாக, சத்தான உணவை சாப்பிடுகிறார்கள்!

4 இலட்சத்து 22 ஆயிரத்து 535 பேரை, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் கவனித்துக் கொண்டோம்!

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில், 93 ஆயிரத்து 379 பேர் பயனடைந்திருக்கிறார்கள்.

இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டத்தில், 7 ஆயிரத்து 838 பேரின் உயிரையும், அவர்கள் குடும்பங்களின் மகிழ்ச்சியையும் காப்பாற்றி யிருக்கிறோம்!

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம் 4 ஆயிரத்து 410 பேரை திடமானவர்களாக மாற்றியிருக்கிறது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலமாக 59 ஆயிரத்து 374 பேர் பயனடைந்திருக்கிறார்கள்.

வேளாண் உபகரணத் தொகுப்புகள் வழங்கும் திட்டம் மூலம் 6 ஆயிரத்து 523 பேர் பயனடைந்திருக்கிறார்கள்.

புதிய வேளாண் காடு வளர்ப்பு திட்டம் மூலம் 2 ஆயிரத்து 125 பேர் பயனடைந்திருக்கிறார்கள்.

14 ஆயிரத்து 514 பேர் புதிய மின் இணைப்புகளை பெற்றிருக்கிறார்கள்.

2 இலட்சத்து 60 ஆயிரத்து 444 தொழிலாளர்களுக்கு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை நலத் திட்ட நிதியுதவிகளை வழங்கியிருக்கிறோம்!

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டம் மூலம் 78 ஆயிரத்து 70 பேர் பயனடைந்திருக்கிறார்கள்.

தாட்கோ மூலமாக 896 பேருக்கு கடனுதவி வழங்கி யிருக்கிறோம்.

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக, 6 ஆயிரத்து 276 பேர் வேலைவாய்ப்புகள் பெற்றி ருக்கிறார்கள்.

இப்படி இத்தனை இலட்சம் மக்களுக்கு இத்தனைத் திட்டங்களை தருமபுரிக்காக செய்திருக்கிறோம்; தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். இனியும் நாங்கள் தான் செய்யப் போகிறோம்.

மாநிலத்தின்  ஒவ்வொரு பகுதியின், ஒவ்வொரு தனிமனிதருடைய எதிர்பார்ப்பையும் நிறைவேற்றித் தருகின்ற ஆட்சியாக நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சி செயல்பட்டு வருகிறது.

‘சொன்னதை செய்வோம் – செய்வதைத்தான் சொல்வோம்’ என்று தலைவர் கலைஞர் காட்டிய வழி யில் உழைத்துக் கொண்டிருக்கிறோம்!

ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றைக்கே…

2021 தேர்தலுக்கு முன்பு, விடியல் பயணம் திட்டம் குறித்த வாக்குறுதியை தேர்தல் அறிக்கையில் சொன்னோம். உடனே நமக்கு எதிரானவர்கள் என்ன சொன்னார்கள்? இது நிறைவேற்ற முடியாத வாக்குறுதி – இதனால், பேருந்துகளை குறைத்து விடுவார்கள் – பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி விடுவார்கள் என்று தங்கள் இஷ்டத்துக்கு கதை – திரைக்கதை வசனமாக எழுதத் தொடங்கினார்கள்! ஆனால், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், தமிழ்நாட்டின் நிதிநிலைமையை பாழ்படுத்துவதையும் மீறி, சொன்னதுபோல், ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றைக்கே, விடியல் பயணம் திட்டத்துக்கு கையெழுத்திட்ட கை தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய கை.

இந்தத் திட்டத்திற்கு ஆகின்ற பணத்தை, செலவாக பார்க்காமல், பெண்களுக்கான சேமிப்பாக, மகளிர் முன்னேற்றத்திற்கான முதலீடாகதான் நாங்கள் நினைத்தோம்! இதனுடைய பலன் சமூகத்தில் எதி ரொலிக்க தொடங்கிவிட்டது!

விடியல் பயணம் – மிகப்பெரிய புரட்சி!

ஒவ்வொரு மாதமும் சுமார் ஆயிரம் ரூபாய் என்று நாம் ஆட்சிக்கு வந்த இந்த 51 மாதத்தில், ஒவ்வொரு மகளிரும் 50 ஆயிரம் ரூபாய் சேமித்திருக்கிறார்கள்! எவ்வளவு பெரிய புரட்சி இது! யாராலும் மாற்ற முடியாத, மறுக்க முடியாத சாதனை இது! அதனால்தான், இப்போது செய்திகளில் பார்த்திருப்பீர்கள்… இந்த விடியல் பயணம் திட்டத்தை, கருநாடகா மாநிலத்திலும், ஆந்திரா மாநிலத்திலும் தற்போது நடைமுறைபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்!

அதனால்தான் சொல்கிறோம்… நாட்டின் அத்தனை வளர்ச்சித் திட்டங்களுக்கும் தமிழ்நாடுதான் முன்னோடி! திராவிட மாடல்தான் இந்தியாவிற்கான திசைகாட்டி!

திராவிடத்தைப் பழிப்பார்!
சட்டங்களுக்கு ஒப்புதல் தரமாட்டார்!

இதை பொறுத்துக் கொள்ள முடியாமல்தான், ஆட்சிக்கு எதிராக சில விஷமிகள் அவதூறுகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் சொல்வதை பற்றி நான் கவலைப்படவில்லை. அதுதான் அவர்கள் அரசியல்! அவர்களைவிடவும் மலிவான அரசியல் செய்கின்றார் ஒருவர்! யாரென்று தெரியும் உங்களுக்கு – அவர்தான் ஒன்றிய பா.ஜ.க. அரசு நியமித்திருக்கின்ற நம்முடைய ஆளுநர் ரவி அவர்கள்! ஆளுநர் மாளிகையில் இருக்கின்ற அவர் செய்கின்ற வேலை என்ன தெரியுமா? தி.மு.க. ஆட்சி மேல் அவதூறு பரப்புகின்றார்! தி.மு.க. மேல் அவதூறு பரப்புவார்! திராவிடத்தைப் பழிப்பார்! சட்டங்களுக்கு ஒப்புதல் தரமாட்டார்! இல்லாத திருக்குறளை அச்சிட்டு வழங்குவார்! தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பார்! நம்முடைய தமிழ்நாட்டு மாணவர்களை இழிவுபடுத்துவார்! தமிழ்நாட்டின் கல்வி, சட்டம்–ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு பற்றியெல்லாம், உண்மைக்குப் புறம்பாக இல்லாதது பொல்லாததைச் சொல்லி, பீதியை கிளப்புவார்! இதை மட்டும் தான் அவர் செய்கிறார்.

ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களே சாட்சி!

இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இதை நாங்கள் உங்களிடம் சொல்கி றோமோ, இல்லை நீங்கள் எங்களிடம் சொல்கிறீர்களா! இல்லை. ஒன்றிய பாஜக அரசு வெளியிடுகின்ற புள்ளி விவரங்களே சாட்சியிருக்கிறது!

அதுமட்டுமல்ல, இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்களை விட தமிழ்நாடு அனைத்து விதத்திலும் மிகச் சிறந்த மாநிலமாக இருக்கிறது. இதையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியாமல், எரிச்சலில், தன்னுடைய கோபத்தை புலம்பலாக பொதுமேடைகளில் கொட்டித் தீர்க்கிறார்.

பள்ளிக் கல்வியில், இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பெற்றிருக்கிறோம். தமிழ்நாடு அமைதியான மாநிலமாக இருப்பதால்தான் இந்த 4 ஆண்டு காலத்தில், 10 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பி லான முதலீடுகளை நாம் ஈர்த்திருக்கின்றோம்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையாம். ஆளுநர் கண்டுபிடித்திருக்கிறார். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின்

2022 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியா விலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கின்ற மாநிலங்களில் பா.ஜ.க. ஆளுகின்ற உத்தரப்பிர தேசம்தான் முதலிடத்தில் இருக்கிறது. அதனால் ஆளுநர் அவர்களே, நீங்கள் கம்பு சுற்ற வேண்டியது இங்கே இல்லை – பாஜக ஆளக்கூடிய மாநிலங்களில் தான் அங்கு சென்று கம்பு சுற்றுங்கள் –தமிழ்நாட்டில் இல்லை. அங்கு சென்று சுற்றுங்கள்.

ஒன்றிய பா.ஜ.க. அரசின்
இழிவான அரசியல்!

தொடர்ந்து தமிழுக்கு எதிராக – தமிழ்நாட்டுக்கு எதிராக – தமிழர்களுடைய உணர்வுகளுக்கு எதிராக – பேசிவிட்டு வருகின்ற ஆளுநரை வைத்து, தன்னு டைய இழிவான அரசியலை ஒன்றிய பாஜக அரசு செய்கின்றது. என்னைப் பொறுத்தவரையில், அவர் தொடர்ந்து தமிழ்நாட்டில் இருக்கவேண்டும். அவர் இருப்பதால்தான் நமக்கு நல்லது என்று நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக் கொண்டு வருகிறேன்.

ஏனென்றால், நமக்குள் இருக்கின்ற மொழி உணர்வை, இன உணர்வை, திராவிட இயக்கக் கொள்கை உணர்வை பட்டுப் போக விடாமல் – கொள்கை நெருப்பு அணையாமல் பார்த்துக் கொள்கின்ற வேலையை ஆளுநர் ரவி சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்! அவர்பேசட்டும். நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை. என்னுடைய நோக்கம் எல்லாம் மக்களாகிய உங்களைப் பற்றிதான். வாக்களித்த உங்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே சிந்தனை.

இந்த இரண்டு வாரங்களுக்குள் மூன்று முக்கியமான திட்டங்களைத் தொடங்கி வைத்திருக்கிறேன்.

உங்களுடன் ஸ்டாலின்

நலம் காக்கும் ஸ்டாலின்

தாயுமானவர் திட்டம்

இந்தத் திட்டங்களைப் பற்றி நான் அதிகம் விவ ரிக்கவே தேவையில்லை. ஏனென்றால், பயன்பெற்று வரக்கூடிய நீங்களே அந்தத் திட்டங்களுக்கு தூதராக மாறிவிட்டீர்கள்.

அரசுத்துறை சேவைகளில், பொதுமக்களுடைய அனைத்துக் கோரிக்கைகளையும் உடனுக்குடன் நிறை வேற்றி தருவது ‘உங்களுடன் ஸ்டாலின்!’ இதுவரை 3 ஆயிரத்து 561 முகாம்களில் நம்முடைய அரசு மேல் முழு நம்பிக்கையுடன் 3 இலட்சத்து 41 ஆயிரத்து 395 பேர் தங்களுடைய கோரிக்கை மனுக்களைக் கொடுத்தி ருக்கிறார்கள்.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில், 74 முகாம்கள் மூலமாக இதுவரை 92 ஆயிரத்து 841 பேர் பயனடைந்தி ருக்கிறார்கள்.

தாயுமானவர் திட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திற னாளிகள் குடும்பங்களைக் கண்டறிந்து அவர்கள் வீடு களுக்கே நேரடியாக ரேசன் பொருட்கள் தரப்படுகிறது.

உணர்ச்சிப் பெருக்கோடு
முதியோர்கள் தரும் பேட்டி!

இப்படி 21 இலட்சம் குடும்பங்களுக்கு அரசே அத்தியாவசிய பொருட்களை கொண்டு சென்று வழங்கப்படுகிறது. வயதானவர்கள், ரேசன் கடைக்கு வரத் தேவையில்லை. வரிசையில் நிற்கத் தேவையில்லை. பொருட்களை வீடுவரை கஷ்டப்பட்டு தூக்கிக் கொண்டு செல்லத் தேவையில்லை. இவை எல்லாவற்றையும் அரசே செய்து தருகிறது. இதன் மூலமாக, அரசுக்கு கூடுதல் செலவாகும் என்றாலும், அதைப் பற்றி நாங்கள் கவலைப்பட வில்லை. நாங்கள் செலவாக கருதவில்லை. அரசின் கடமையாகதான் நாங்கள் நினைக்கிறோம். வீட்டிற்கே பொருள் வந்து சேர்ந்ததும், அந்த முதியோர்கள் கொடுத்துவிட்டு வரு கின்ற பேட்டிகளை எல்லாம் ஊடகங்களின் நான் பார்த்தேன்.

உணர்ச்சி பெருக்கோடு நா தழுதழுக்க அவர்கள் பேட்டி தருகிறார்கள். அந்த பேட்டிகளைப் பார்க்கும் போது, நானும் அதிகம் உணர்ச்சி வசப்படுகிறேன். நெகிழ்ந்து போகிறேன். நான் முதலமைச்சரானதின் நோக்கம் நிறைவேறிக் கொண்டிருப்பதை நினைத்து நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறேன். மனநிறைவை அடைகிறேன்.

அடுத்து அமையப் போவதும் உங்களுடைய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி தான்.

அனைத்துத் துறையிலும் வளர்ந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்துவோம்!

திராவிட மாடல் 2.0 ஆட்சியில், இந்தியாவிலேயே அனைத்துத் துறையிலும் வளர்ந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்துவோம்!

உங்கள் எல்லோருடைய கோரிக்கையையும் நிறைவேற்றுகின்ற ஆட்சியாக நிச்சயம் இருக்கும் என்று சொல்லி, நான் மீண்டும், மீண்டும் சொல்கிறேன் – இந்த ஆட்சி உங்களுக்கான ஆட்சி! மக்களுக்கான ஆட்சி! ஏழை எளியவர்களுக்கான ஆட்சி! பாட்டாளி பெருமக்களுக்கான ஆட்சி! மகளிருக்கான ஆட்சி! இளை ஞர்களுக்கான ஆட்சி! ஒட்டுமொத்த உங்க ளுக்கான ஆட்சி! ஆட்சி! என்று சொல்லி, விடைபெறுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *