சிறீநகர், ஆக.16- ஜம்மு காஷ்மீரின், கிஷ்துவார் மாவட்டத்தில் உள்ள சோசிட்டி கிராமத்தில் நேற்று (15.8.2025) ஏற்பட்ட மேக வெடிப்பால் திடீர் என கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள ஆற்றில் திடீர் என வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அந்த கிராமத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள மச்சைல் மாதா மலைக்கோவிலுக்குச் செல்ல அங்கு குவிந்திருந்த ஏராளமான பக்தர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். மலைப்பாதையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஒரு சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. யாத்திரைக்கு சென்ற பக்தர்கள் உள்ளிட்ட பலர் இதில் சிக்கி கொண்டனர். மலைப்பாதையில் இருந்த வீடுகள், கட்டடங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, நேற்று முன்தினம் (14.8.2025) வரை 46 பேர் உயிரிழந்தனர் என அறிவிக்கப்பட்டது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 170 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். இதில், படுகாயம் அடைந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சோசிட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மாயமானதால், அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
மீட்பு நடவடிக்கையில், 2-ஆவது நாளாக தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், துணை ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். வீடுகள், கடைகள் போன்றவை இடிபாடுகளில் சிக்கி புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பலியானவர்களில் 21 உடல்களை ஜம்மு-காஷ்மீர் அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்தநிலையில், ஜம்மு – காஷ்மீர் பெரு வெடிப்பில் 60 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 200க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.