தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் – எச்சரிக்கை!

Viduthalai
4 Min Read

 சமூக அடக்குமுறைகளை, ஜாதிய ஏற்றத் தாழ்வுகளைத் துடைத்தெறிந்த தந்தை பெரியாரை அவமதிப்பதா?

மக்கள் கோபத்திற்கு அண்ணாமலை ஆளாக நேரிடும்!

தமிழ்நாடு

சென்னை, நவ.11 சமூக அடக்குமுறைகளை, ஜாதிய ஏற்றத் தாழ்வுகளைத் துடைத்தெறிந்த தந்தை பெரியாரை அவ மதிப்பதா? மக்கள் கோபத்திற்கு அண்ணாமலை ஆளாக நேரிடும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ்.அழகிரி கண்டனம் – எச்சரிக்கை!

காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கட்சியை வளர்ப்பதற்காக பல கட்டங்களாக விட்டுவிட்டு நடைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். பெரும் பணத்தை செலவு செய்து கட்சியினரைத் திரட்டி, குறிப்பிட்ட நகர வீதிகளில் அந்த நடைப்பயணம் நடைபெற்று வருகிறது. இதில் உரையாற்றுகிற அண்ணாமலை, ஒன்றிய ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்கிற மமதையில் காழ்ப்புணர்ச்சியோடு சர்ச் சைக்குரிய விஷமத்தனமான கருத்துகளை கூறி வருகிறார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர் குறித்து மிக மிக இழிவான ஆட்சேபனைக்குரிய கருத்துகளை வெளிப்படுத்துகிறார். இவரைப் போல இழி வாகக் கருத்து கூறியவர்கள் கடந்த காலங்களில் வரலாற்றி லிருந்து துடைத்தெறியப்பட்டதைத் திடீர் அரசியல்வாதியான அண்ணாமலை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

தமிழ்ச் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட அற்புதமான தலைவர் தந்தை பெரியார்

அண்ணாமலையை பொறுத்தவரை ஆட்டைக்கடித்து, மாட்டைக் கடித்து தற்போது மனிதனை கடிக்க வந்திருக்கிறார். தமிழ்நாட்டில் ஈராயிரம் ஆண்டுகளாக ஊறிப்போன சமூக அடக்குமுறைகளை, அநீதிகளை, ஜாதிய ஏற்றத் தாழ்வுகளை, தீண்டாமைக் கொடுமைகளை துடைத்தெறிவதற்காக தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்டு தமிழ்ச் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட அற்புதமான தலைவர் தந்தை பெரியார். ஹிந்து மதத்திலே ஊறிப்போன ஸநாதன, பிற்போக்குத்தனமான, மூடநம்பிக்கை கொண்ட பழக்க வழக்கங்களுக்கு மக்கள் பலியாகக் கூடாது என்று சில கருத்துகளை வலிமையாக தந்தை பெரியார் தனது பரப்புரையில் கூறியிருக்கிறார்.

நீண்ட நெடுங்காலமாக ஆத்திகமும், நாத்திகமும் இந்த சமூகத்திலே இருந்து கொண்டு தான் வருகிறது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ, அதே உரிமை கடவுள் மறுப்பாளர்களுக்கும் பரப்புரை மேற் கொள்ள உரிமை இருக்கிறது. அந்த அடிப்படையில் ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கும் மேலாக கடவுள் மறுப்பு கொள்கையை பகுத்தறிவின் அடிப்படையில் மூடநம்பிக்கைகளுக்கு எதி ராக தந்தை பெரியார் பரப்புரை மேற்கொண்டு வந்தார். இதில் மாற்றுக் கருத்து கூறுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அண்ணாமலையைப் போல நாகரீகமற்ற முறையில் தந்தை பெரியாரை விமர்சனம் செய்தது கிடையாது.

காந்தியாரை இழிவுபடுத்துகிற 

பா.ஜ.க.வுக்கு என்ன தண்டனை கொடுப்பது?

சிறீரங்கம் கோயிலுக்கு முன்னுள்ள தந்தை பெரியார் சிலையை அகற்றுவது தான் நோக்கம் என்று கூறுகிறார். நாடாளுமன்ற மய்ய மண்டபத்தில் காந்தியார் படுகொலைக் குற்றவாளியான சாவர்க்கர் படத்தை பா.ஜ.க. திறந்து வைத்ததற்குக் கடுமையான விமர்சனம் எழுந்தது. ஆனால், அந்த படத்தை அகற்ற வேண்டுமென்று கோரி எவரும் போராட்டம் நடத்த முன்வரவில்லை. காந்தியாரைக் கொன்ற கோட்சேவை தியாகி என்று பிரக்யாசிங் தாகூர் கூறியதற்காக பா.ஜ.க. அவர் மீது நடவடிக்கை எடுத்ததா? இந்திய விடுதலையைப் பெற்றுத் தந்த காந்தியாரை இழிவுபடுத்துகிற பா.ஜ.க.வுக்கு என்ன தண்டனை கொடுப்பது? இதற்கெல்லாம் அண்ணாமலை விளக்கம் கூறுவாரா?

நீதிக்கட்சி ஆட்சிக் காலத்திலிருந்து தமிழ்நாட்டில் மக்கள் அனுபவித்து வந்த இட ஒதுக்கீட்டுக்கு நீதிமன்றங்களால் ஆபத்து வந்தபோது, அரசமைப்புச் சட்டம் 1950 இல் அமலுக்கு வந்தவுடனேயே அதற்காக திருச்சியில் குரல் கொடுத்துப் போராடியவர் தந்தை பெரியார். அந்த போராட்டத்தின் தீவிரத் தன்மையை உணர்ந்து அந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று அன்றைய பிரதமர் நேருவிடம் வலியுறுத்தியவர் பெருந்தலைவர் காமராஜர்.

அருவெறுக்கத்தக்க அநாகரீக பேச்சுகளினால் பா.ஜ.க. குழிதோண்டிப் புதைக்கப்படுவது உறுதி!

அதனடிப்படையில் தான் அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த சில மாதங்களிலேயே அரசியல் நிர்ணய சபையில் பிரதமர் நேரு முதல் திருத்தம் கொண்டு வந்து இட ஒதுக் கீட்டுக்குச் சட்டப் பாதுகாப்பு வழங்கினார். அதனடிப்படையில் தான் இன்றைக்கும் பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் இட ஒதுக்கீட்டை 75 ஆண்டுகளாக அனுபவித்து வரு கிறார்கள். இத்தகைய நடவடிக்கையின் மூலம் சமூகநீதியைப் பாதுகாத்த தந்தை பெரியாரையும், பெருந்தலைவர் காம ராஜரையும் இழிவுபடுத்துகிற அண்ணாமலையை தமிழ்ச் சமுதாயம் என்றைக்கும் மன்னிக்காது. இத்தகைய அருவெறுக் கத்தக்க அநாகரீக பேச்சுகளினால் பா.ஜ.க. குழிதோண்டிப் புதைக்கப்படுவது உறுதி.

தந்தை பெரியார் காங்கிரசை 1952 தேர்தலில் 60 அடி குழிதோண்டிப் புதைப்பேன் என்று பேசியதாக அண்ணா மலை புலம்பியிருக்கிறார். எந்த பெரியார் 1952 தேர்தல் பரப்புரையில் அத்தகைய கருத்தைக் கூறினாரோ, இரண்டு ஆண்டுகள் கழித்து 1954 ஏப்ரல் 13 அன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக காமராஜர் பொறுப்பேற்ற செய்தி கிடைத்தவுடனே அதை ஆதரிக்கத் தொடங்கினார். அவரது ஆட்சிக் காலமான ஒன்பதரை ஆண்டுகள் முழுவதும் ஆதரித்து தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பெரியார் பரப்புரை மேற்கொண்டதை அரைவேக்காடு அண்ணாமலை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

தமிழ்நாட்டு மக்களின் கோபத்திற்கும், வெறுப்புக்கும் ஆளாவதை எவராலும் தடுக்க முடியாது!

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை, தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பை வரலாற்று நூல்கள் மூலம் அறிந்து கொண்டு பேசுவது நல்லது. இத்தகைய பேச்சுகளினால் கடுமையாகப் பாதிக்கப்படப் போவது அண் ணாமலை அல்ல. மாறாக, வருகிற 2024 மக்களவை தேர்தலில் 39 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கவே அண்ணாமலையின் பேச்சுகள் உதவப் போகின்றன. எனவே, தமிழ்நாட்டு மக்களின் கோபத்திற்கும், வெறுப்புக்கும் அண்ணாமலை ஆளாவதை எவராலும் தடுக்க முடியாது.

இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *