சரியான பாடம்! ஆளுநரின் சுதந்திர நாள் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் தி.மு.க. கூட்டணிக் கட்சிகள்

1 Min Read

சென்னை, ஆக.14  சுதந்திர நாளை  முன்னிட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்பாடு செய்துள்ள தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகவும், கூட்டாட்சித் தத்துவத்திற்கு விரோதமாகவும் ஆளுநர் செயல்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டி இந்தக் கட்சிகள் புறக்கணிப்பு முடிவை எடுத்துள்ளன.

புறக்கணிப்புக்கான முக்கிய காரணங்கள்

கலைஞர் பல்கலைக்கழக மசோதா: கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதாவை வேண்டுமென்றே காலம் தாழ்த்தி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பதாக அதன் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதே காரணத்திற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் விருந்தில் பங்கேற்காது என அதன் மாநில செயலாளர்கள் சண்முகம் மற்றும் முத்தரசன் கூறியுள்ளனர்.

கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான செயல்பாடு: ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு நலனுக்கு எதிராகவும், அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருவதால் அவரது அணுகுமுறையைக் கண்டித்து விருந்தை புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

மாநில அரசின் அதிகாரத்தை சீர்குலைத்தல்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுடன் தேவையற்ற மோதல்களை உருவாக்கி, அதன் ஜனநாயக செயல்பாடுகளை சீர்குலைக்கும் வகையில் ஆளுநர் செயல்படுவதால் தேநீர் விருந்தை மனிதநேய மக்கள் கட்சி புறக்கணிப்பதாக அதன் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

 விடுதலைச்சிறுத்தைகள்

இந்த ஆண்டும் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்க மாட்டோம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.

சுதந்திர நாள் தேநீர் விருந்துக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ள நிலையில், திமுக கூட்டணியைச் சேர்ந்த முக்கிய கட்சிகள் அனைத்தும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *