திருச்சி, ஆக. 13- ஹோலி கிராஸ் கல்லூரி வளாகத்தில், சிலம்ப உலகச் சம்மேளனம் அமைப்பு நடத்திய பன்னாட்டு அளவிலான சிலம்பப் போட்டிகள் 10.08.2025 அன்று நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலம்பாட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்ற இந்தப் போட்டிகளில், திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான 75 மாணவ, மாணவிகள் பங்கேற்று, தனிச்சிலம்பம், மான்கொம்பு, வேல்கம்பு, வாள்வீச்சு,சிலம்பச் சண்டை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நடந்த சிலம்பப் போட்டிகளில் கலந்து கொண்டு 17 முதல் பரிசுகளும், 16 இரண்டாம் பரிசுகளும், 42 மூன்றாம் பரிசுகளும் பெற்று, போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ,மாணவிகளும் வெற்றி பெற்று,வியத்தகு சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை தேடித் தந்த மாணவர்களையும், பள்ளியின் சிலம்பப் பயிற்சியாளர்பத்மா அவர்களையும், பள்ளியின் நிறுவனர், தாளாளர், பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பணித்தோழர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.