நாடாளுமன்றமா சனாதன சத்திரமா?

Viduthalai
3 Min Read

புதிய நாடாளுமன்றத்தின் எல்லாச் சுவர்களிலும் சனாதன மும், சமஸ்கிருதமும் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்றம் பாஜ அலுவலகம்போல வடிவமைக்கப்பட் டுள்ளது என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் “புதிய நாடாளுமன்ற கட்டடம் ஜனநாயகத்திற்கும் இந்தியாவின் பன்மைத்தன்மைக்கும் தலைமையகமாக இருக்க வேண்டிய ஓர் இடம். ஆனால், பா.ஜ. கட்சி அலுவலகமாக உருவாக்கப் பட்டுள்ளது. அவையின் நுழைவாயிலில் கையில் தண்டம் ஏந்தி, விரல் நீட்டி ஆவேசமாகக் காட்சியளிக்கும் சாணக்கியனை பிரமாண்டமாக நிறுவியுள்ளதன் மூலம், இவர்கள் என்ன அரசி யலை முன்னெடுக்க உள்ளனர் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. சாணக்கியனுக்கும், ஜனநாயக சிந்தனைக்கும் என்ன சம்பந்தம்?

கட்டடம் எங்கும் சமஸ்கிருத எழுத்துக்களாலும் புராண காட்சிகளாலும் நிரம்பியுள்ளது. கட்டடத்தின் நடுவில் 250 அடி நீளத்தில் மிகப்பிரமாண்ட விஷ்ணு புராணத்தில் உள்ள பாற்கடலைக் கடையும் காட்சி, வார்ப்புக்கலை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் சட்டமியற்றும் ஒரு பேரவைக்கும் இதற்கும் என்ன தொடர்பு? சகோதரத்துவமும், சமத்துவமும் பேணும் அரசியல் அமைப்பிற்கு எதிரான வர்ணங்களை மேற்கோளாகக் கட்டுவதும், தற்கால அரசமைப்பு என்பது அதன் நீட்சி என்று கூறுவதும் அரசமைப்பின் மாண்பையும் அதன் உள்ளடக்கத்தையும் சிதைக்கும் முயற்சி.

இந்தியாவின் வரலாறு, இந்தியாவின் ஆட்சி முறை என்பவை மவுரியர், குப்தர், முகலாயர், மராத்தியர், கலிங்கர், ஆங்கிலேயர், பல்வேறு பழங்குடிகள் உள்ளிட்ட எல்லோ ருடைய கூறுகளையும் உள்ளடக்கிய – அதிலிருந்து பரிணமித்த ஓர் ஆட்சி முறையைக் கொண்டுள்ளது. அவை இங்குள்ள கலைவடிவங்களில் இல்லை. பன்மைத்துவம் கொண்ட நந்தலால் போஸின் படைப்பினை அழித்து, அதற்கு மாறாக பண்டைய வேத காலத்தில் ஜனநாயகம் நிலவியது என்பது போன்ற சித்திரத்தை உருவாக்கியுள்ளனர்.

இதனை நாடாளுமன்றத்தில் வைத்து அதற்கு ஓர் அங்கீகாரம் வழங்குவதும், நேரடியாக இந்துத்துவா அரசியல் கோட்பாட்டை நிறுவும் அப்பட்டமான முயற்சியாகும். பா.ஜ. கட்சி அலுவலகத்தில் நிறுவ வேண்டியதை, நாட்டின் பேரவையான நாடாளுமன்றத்தில் நிறுவியதென்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கே எதிரான செயல். சாவர்க்கரின் பிறந்தநாளில், மன்னராட்சியின் அடையாளமான செங்கோலைக் கொண்டு சடங்கு சம்பிரதாயங்களோடு மட்டும் இந்த நாடாளுமன்றம் திறக்கப்படவில்லை, இந்த மொத்தக் கருத்தியலைக் கொண்டுதான் இது உருவாக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மதுரை மக்களவை உறுப்பினர் தோழர் சு. வெங்கடேசன் அவர்கள் கூறியுள்ள தகவல்களும் அதன் அடிப்படையிலான கருத்துகளும் மிகவும் கவனத்துக்குரியவை – கவலைக்கு உரியவையும் ஆகும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் மதச் சார்பின்மையை அடிப்படையாகக் கொண்டது. மதச் சார்பின்மை என்றால் அரசுக்கும், மதத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று பொருளாகும்.

ஆனால் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள் ஹிந்து மதம் தொடர்பான புராண, இதிகாசத் தொடர்பு கொண்ட கட்டுக்கதைகள்  – மூட நம்பிக்கைகளின் மொத்த தொகுப்புகள்.

சாணக்கியன் உருவம் வடிக்கப்பட்டுள்ளது. சாணக்கியன் என்பவன் மகா மகா சூழ்ச்சிக்காரன். எப்படிச் சுரண்டுவது போன்ற மோசடி வித்தைகளை மன்னனுக்குப் போதிப்பவனாகும்.

விஷ்ணு புராணத்தில் கற்பிக்கப்பட்ட பாற்கடலை 250 அடி நீளத்தில் சித்தரித்துள்ளார்களாம்.

பாற்கடல், தயிர்க்கடல், நெய்க்கடல், தேன்கடல் எல்லாம் எங்கே இருக்கின்றது? எந்தப் புவியியல் ஆதாரத்தின்படி இவை உள்ளன?

பாற்கடலை மந்தார மலையை மத்தாக வைத்து சிவபிரானின் கழுத்திலிருந்த வாசுகி பாம்பைக் கயிறாகப் பயன்படுத்திக் கடைந்தார்கள்.

தேவர்கள் வாசுகியின் வால் பக்கமும், அசுரர்கள் வாசுகிப் பாம்பின் பின் தலைப் பக்கமும் நின்று கடைந்தார்கள்!.

இதன் மூலம் கிடைத்த அமிர்தத்தை தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் பகிர்ந்து கொடுக்காமல் – மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை மயக்கி வாசுகிப் பாம்பு கக்கிய நஞ்சை அசுரர்களுக்கும், சாகா வரம் உள்ள அமிர்தத்தை தேவர்களுக்கும் கொடுத்தான் என்பது நம்பத்தகாதது என்றாலும், மகாவிஷ்ணுவே சூழ்ச்சி செய்து தேவர்களுக்கு அமிர்தத்தையும் அசுரர்களுக்கு நஞ்சையும் கொடுத்தான் என்பதையே நாடாளுமன்றத்தில் தீட்டப்பட்டுள்ள பாற்கடலின் கதை கூறுகிறது.

நடைபெறும் ஒன்றிய பிஜேபி அரசு தேவர்களான பார்ப் பனர்களுக்கானது – அசுரர்களாகிய பார்ப்பனர் அல்லாதாருக்கு எதிரானது. அதுதான் அவர்கள் விரும்பும் “ஹிந்து ராஜ்யம்” என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

நாட்டின் பெரும்பாலான மக்களான பார்ப்பனரல்லாத மக்கள் இந்தத் ‘தேவர்களின்’ ஆட்சிக்கு, நடக்கவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலில் எதைக் கொடுக்க வேண்டும்? அமிர்தத்தையா? நஞ்சையா? முடிவு செய்யுங்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *