மதுரை, ஆக.7- அடிப்படை தேவைகள் மற்றும் பொது வளங்கள் ஜாதிய பாகுபாடின்றி கிடைப்பதை குழு அமைத்து கண்காணிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், தலைவன் கோட்டையில் சிலரை அவதூறாக பேசி, மிரட்டல் விடுத்தததாக திருமலைச்சாமி என்பவர் மீது புளியங்குடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு விசாரணை நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. இதை எதிர்த்து திருமலைச்சாமி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தார்.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருந்தார். புகார்தாரர் முனியம்மாள் தரப்பில், மற்ற சமூக மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள குடிநீர் குழாயிலிருந்து, தண்ணீர் பெறுவது கடினமாக உள்ளதாக நீதிபதியிடம் கூறியிருந்தார். ஏற்கெனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தென்காசி மாவட்டம் தலைவன் கோட்டை பகுதியில் போதிய அளவு குடிநீர் குழாய்கள் பொருத்தி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்த மனு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஒளிராஜா ஆஜராகி, குறிப்பிட்ட பகுதியில் போதிய அளவு குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. தினமும் 3 மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என அறிக்கை தாக்கல் செய்தார். இதேபோல் பாதிக்கப்பட்டோர் தரப்பில் தற்போது எந்த பாகுபாடும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தனி மனித சுதந்திர பாதிக்கப்படும்போதும், அடிப்படை பொது தேவைகளை பகிர்ந்து கொள்ளும் போதும், ஜாதியரீதியான பிரச்சினைகள் ஏற்படும்போதும் அதிகாரிகள் நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருக்கக் கூடாது.
அனைத்து சமூகத்தினருக்கும் எவ்வித பாகுபாடும் இன்றி பொது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும். அடிப்படை பொது தேவைகளில் பற்றாக்குறை ஏற்படும்போதும், அதில் பாகுபாடு காட்டும்போதுதான் ஜாதியரீதியான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பொது வளங்கள் சரிசமமாக எவ்வித பாகுபாடும் இன்றி வழங்கப்பட வேண்டும் என்பதைத்தான் வன்கொடுமை தடுப்புச் சட்டம் கூறுகிறது. இதை உறுதி செய்வது அரசின் பணியாகும்.
ஒருவரின் அடிப்படை உரிமைகள் யாராலும் எந்த நிலையிலும் மீறப்படவில்லை என்பதை, ஒரு மாநிலத்தின் அனைத்து துறை அதிகாரிகளும் உறுதிப்படுத்த வேண்டும். தலைவன்கோட்டை மக்களின் தேவை பூர்த்தி செய்யப்பட்டவுடன், அங்கு பிரச்சினை சரியானது என்பது இதை உறுதிப்படுத்துகிறது. எனவே, தமிழ்நாடு முழுவதும் அடிப்படை தேவைகள், பொது வளங்கள் எவ்வித ஜாதிய பாகுபாடும் இல்லாமல் கிடைக்க அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.
உறுதிப்படுத்த வேண்டும்
தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குநரகம், தமிழ்நாடு பேரூராட்சிகள் இயக்குநரகம், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரின் மேற் பார்வையின் கீழ் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை தலைவர் ஆகியோர் தலைவன் கோட்டை கிராமத்தை முன்மாதிரியாக வைத்து தனிமனித சுதந்திரம் பாதுகாப்பாக உள்ளது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்து ஆக.21ல் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.