ஒலி மாசைத் தடுக்கும் கட்டுமானம்

1 Min Read

நகரத்தின் மத்தியில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் வாழ்பவர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினை ஒலி மாசுபாடு. அதீத இரைச்சல் துாக்கத்தைக் கெடுக்கும். இது உடல், மன நலனுக்கு நல்லதல்ல. இதனால் வீட்டிற்குள் ஒலி வராதபடி செய்வதற்கு என்று தனியாகச் செலவிட வேண்டி உள்ளது. ஒலியைத் தடுக்கும் கட்டுமானப் பொருட்கள் ஆண்டுதோறும் புதிதாக வந்துகொண்டு தான் உள்ளன. அந்த வகையில், சுவிட்சர்லாந்து ஆய்வாளர்கள் ஒரு புது ஸ்லாபை உருவாக்கி உள்ளனர்.

வழக்கமாக பயன்படும் ஒலி தடுக்கும் பொருட்களை விட இது 4 மடங்கு குறைவான தடிமன் கொண்டது. அதனால் இடத்தை அடைக்காது. மற்றவற்றைக் காட்டிலும் இதில் உள்ள கூடுதல் சிறப்பு என்னவென்றால், இதைக் குறிப்பிட்ட ஒலி அதிர்வெண்களை மட்டும் தடுக்கும் வகையில் வடிவமைக்க முடியும். ஜிப்ஸம் தாது, சிமென்ட் கொண்டு இது உருவாக்கப்படுகிறது. இதில் வெவ்வேறு அளவுகளில் வெற்றிடம் இருக்கும். இவற்றில் இருக்கும் காற்று தான் ஒலி அலைகளைத் தடுத்து நிறுத்துகிறது. இந்த வெற்றிட அளவுகளை நம் தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்.

ஆய்வாளர்கள் 5.5 செ.மீ., தடிமனில் இந்த ஸ்லாபைத் தயாரித்தனர். அதீத சத்தமுடைய தெருவில் உள்ள ஒரு வீட்டைத் தேர்ந்தெடுத்தனர். 130 சதுர அடி பரப்பளவு கொண்ட வீட்டுச் சுவர் முழுக்க இவற்றைப் பதித்தனர். வெளியில் இருந்து வீட்டிற்குள் கேட்கும் சத்தம் 4 டெசிபல் குறைந்தது. இந்த ஸ்லாபை வேண்டிய அளவில், வடிவில் எளிதாக வெட்டி வீட்டுக்கு வெளியே அல்லது உள்ளே பதித்துவிடலாம். இது வெப்பம், குளிர், மழை தாங்கும், எளிதில் தீப்பிடிக்காது. இது விரைவில் சந்தைக்கு வர உள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *