நூற்றாண்டு விழா – பிரச்சாரக் கூட்டங்களை எழுச்சியுடன் நடத்த மதுரை புறநகர் மாவட்டக் கழகக் கலந்துரையாடலில் முடிவு!

Viduthalai
4 Min Read

அரசியல்

மதுரை, ஜூன் 12 மதுரை புறநகர் மாவட்ட  கழகக் கலந் துரையாடல் கூட்டம் கடந்த 28.05.2023  அன்று  மாலை 

6 மணிக்கு மதுரை கூடல் நகரில் உள்ள புறநகர் மாவட்டத் தலைவர் த.ம.எரிமலையின் பெரியார் இல்லத்தில் நடை பெற்றது.

அனைவரையும் வரவேற்று மதுரை புறநகர் மாவட்ட மகளிரணி தலைவர் பெ.பாக்கியலெட்சுமி உரையாற்றினார். புறநகர் மாவட்டத் தலைவர் த.ம.எரிமலை மற்றும் புறநகர் மாவட்டச் செயலாளர் பா.முத்துக்கருப்பன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர். 

கலந்துரையாடலுக்கு தலைமைக் கழக ஒருங்கிணைப் பாளர் வே.செல்வம் தலைமையேற்று, ஈரோடு பொதுக்குழு வில் தமிழர் தலைவர் அவர்களால் செய்யப்பட்ட பொறுப் பாளர்கள் மாற்றங்கள், புதிய பொறுப்பாளர்கள், நிறைவேற்றப் பட்ட பல்வேறு தீர்மானங்கள் போன்றவற்றைக் குறிப்பிட்டு மதுரை புற நகரில் ஆற்றவேண்டிய பல்வேறு பணிகளைப் பற்றிக் குறிப்பிட்டார்.

90 வயதிலும் பம்பரமாக சுழன்று பணியாற்றும்  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு நாம் இன்னும் வேகமாகப்  பணியாற்றவேண்டும் என்று குறிப்பிட்டு புற நகரில் கழகச் செயல்பாடுகளை இன்னும் வளமாக்குவதற்கு சில வழிகாட்டுதல்களை குறிப்பிட்டு உரையாற்றினார்.

தொடர்ந்து மதுரை புற நகர் மாவட்ட மகளிரணி அமைப் பாளர் செல்லமணி, இளைஞரணி தலைவர் பு.கணேசன், இளைஞரணி அமைப்பாளர் பெ.தமிழ்மணி, உசிலை ஒன்றிய அமைப்பாளர் பெரியசாமி, மாணவர் கழக செயலாளர் அறிவுப்பாண்டி, மாவட்ட மாணவர் கழகத் தோழர் சாமி நாதன், மதுரை  மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் ஆட்டோ செல்வம் ஆகியோர் தங்கள் கருத்தினை எடுத் துரைத்தனர்.

கழகப் பிரச்சாரத் திட்ட உரையினை ஆற்றிய மாநில திராவிடர் கழக வழக்குரைஞரணி துணைச் செயலாளர்  வழக் குரைஞர் நா.கணேசன், சோழவந்தானில் தான் இயக்கத்திற்கு வந்த காலங்களையும், இயக்கத்தினால் தான் பெற்ற அறிவையும், உணர்ச்சியையும், தனக்கு ஒரு நெருக்கடியான  நிலை ஏற்பட்டபொழுது தலைமையில் இருந்து தன்னை எப்படிக் காப்பாற்றினார்கள் என்பதையும் குறிப்பிட்டு, நம் இயக்கத்தைப் பொறுத்தளவில் இயக்கம் நமக்கு அறிவும், மானமும்தான் கொடுக்கும், சோழவந்தானில் பெரியாரியல் பயிற்சி முகாம் என் செலவில் நடத்துகிறேன்  எனக் குறிப்பிட்டு, புற நகர் மாவட்டத்தில்  நடைபெறும் கூட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்றார்.

பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற   மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு  “மதுரை புற நகர் பகுதி என்பது மிக விரிந்த பகுதி, தோழர்கள் திட்டமிட்டு பகுதி, பகுதியாகக் கூட்டம் போடவேண்டும். புற நகர்க் கழகத்தின் சார்பாக அண்மையில் நடத்தப்பட்ட அவனியாபுரம், அலங்காநல்லூர் கூட்டம் போன்றவை நன்றாக திட்டமிடப்பட்டு நடத்தப் பட்டது. நீண்ட நாட்களுக்குப் பின் அந்தப் பகுதிகளில் இயக்கக் கூட்டம் நடைபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் நடக்கவேண்டும்.  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பேரையூர் கூட்டம் வெகு சிறப்பாக நடந்தது.  ஆசிரியர் அவர்களே வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்த கூட்டமாக பேரையூர் கூட்டம் அமைந்தது. நமது பெண் தோழர்கள் பாக்யலெட்சுமி, செல்லமணி, கலைச்செல்வி போன்றவர்கள் தெருக்கடைகளில், நமது கழக சீருடையணிந்து வசூல் செய்தனர். பேரையூர் கடைக்காரர்கள் இப்படி பெண்கள் களத்தில் இறங்கி வேலை செய்கிறார் கள்,பெரியார் இயக்கத்தில் என்று சொன்னதை நானே கேட்டேன். தோழர்கள் எரிமலை, முத்துக்கருப்பன் போன்ற வர்களும் இணைந்து கடை வசூல் செய்தனர்.

ஒருபக்கம் நமது கூட்டத்திற்கு நன்கொடை, இன்னொரு பக்கம் நம் கொள்கை விளம்பரம் என்று இரண்டு நன்மை நமக்கு கிடைத்தது.இதனைப் போல புற நகர் மாவட்டத்தில் கூட்டம் நடைபெறவேண்டும். நிறையக் கூட்டங்களை உற்சாகமாக நாம் நடத்தவேண்டும், அதுதான் ஓயாது உழைக்கும் ஆசிரியர் அவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன், புற நகரில் நடைபெறும் கூட்டங்களுக்கு எனது முழு ஒத்துழைப்பு உண்டு என்று குறிப்பிட்டு உரையாற்றி, வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் பகுத் தறிவு எழுத்தாளர் மன்ற இணையவழிக் கூட்டங்களில் தோழர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.  

நிறைவாக இளைஞரணி பொறுப்பாளர் ஜெ.பாலா  நன்றியுரையாற்றினார். 

செல்லூர் தோழர்கள் இரா.திருப்பதி, இராஜேந்திரன், தங்கமணி, மாணவர் கழகத் தோழர்கள்  சந்தோஷ், சதீஸ் குமார் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

1. மதுரை புறநகர் மாவட்டத்திற்குட்பட்ட நகராட்சி, பேரூ ராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் கழகப் பிரச்சாரம் நடை பெறாத இடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நூற்றாண்டு விழா பிரச்சாரக் கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்படுகிறது.

2. புதிய தோழர்களை அடையாளம்‌ கண்டு அவர்களை இயக்கத்திற்கு பணியாற்றும் களப் பணியாளராக்க, பக்குவப் படுத்தும் அடிப்படைப் பணியைச் செய்யும்  பெரியாரியல் பயிற்சிப்பட்டறையை சிறப்பாக சோழவந்தானிலும் மற்றும் வாய்ப்புள்ள இடங்களிலும் நடத்துவது எனத் தீர்மானிக்கப் படுகிறது.

3, ஈரோடு கழகப் பொதுக்குழு திட்டப்பணிகளை அனைத் தையும் படிப்படியாக நிறைவேற்ற முடிவு செய்யப் படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *