மாநில அரசின் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது; எதிர்ப்புக் குரல் எங்கெங்கும் ஒலிக்கட்டும்! ஒலிக்கட்டும்!!

Viduthalai
4 Min Read

மாநிலங்கள் நடத்தி வந்த மருத்துவ மாணவர் சேர்க்கை – 

கலந்தாய்வை ஒன்றிய அரசே இனி நடத்தும் என்பது சரியா?

அரசியல்

மாநிலங்களிலிருந்து மருத்துவக் கல்லூரி களுக்கான குறிப்பிட்ட சதவிகிதத்துக்கான இடங் களை ஒன்றிய தொகுப்புக்கு எடுத்துச் சென்றது மட்டுமல்லாமல், மாணவர் சேர்க்கை கலந்தாய் வையும் தாங்களே நடத்துவோம் என்று ஒன்றிய அரசு அடம்பிடிப்பதை ஏற்க முடியாது – இதனை எதிர்த்து எங்கும் உரிமைக் குரல் ஒலிக்கட்டும்! ஒலிக்கட்டும்!! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

மாநிலங்களில், மாநில அரசுகளின் ஆளுமை, அதிகாரத்தின்கீழ் இயங்கும் மருத்துவக் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை, கலந்தாய்வினை – மாநில அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையினர் நடத்தும் வழமையான முறையை, ஒன்றிய அரசு மாற்றி, அவர்களே அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் கலந்தாய்வினை நடத்துவது என்பது, மாநில உரிமைகள் பறிப்புக்கான வழிவகை யல்லாது வேறு என்ன?

கூட்டாட்சி முறையே 

ஒன்றிய பி.ஜே.பி. அரசின் கொள்கை!

ஒன்றிய பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். அரசின் கொள்கை, மாநில அரசுகளே இல்லாமல் நாட்டில் கூட்டாட்சிக்குப் பதில் (Federal System) ஒற்றையாட்சி (Unitary) முறையை புகுத்துவது என்பதாகும்.

அதனை செயல்படுத்த, ஒவ்வொரு அதிகாரத்தையும் – சுவரில் உள்ள கற்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியே எடுத்துச் சுவரில் ஓட்டைப் போட்டு உள்ளே நுழைவது போன்ற வேலைகளை பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். ஒன்றிய அரசு 

படிப்படியாக – வெளிப்படையாகவே செய்து வருகிறது!

மருத்துவக் கல்விக்கான மாநிலங்களில் உள்ள மருத்துவப் (MBBS, M.D., M.S. மற்றும்  Super Speciality  பட்டங்கள்) படிப்பினை ‘நீட்’ (NEET) என்ற பலி பீடத்திலும்  – உச்சநீதிமன்றத்தின் ஆணை என்பது போன்ற ஒரு மாயையை முன்னிறுத்தியும், கடந்த 8 ஆண்டுகளுக்குமேலே பீடித்து, அது பல மாணவர் களின் ‘‘உயிர்க் கொல்லியாக” ஆகிவரும் அவலம் தொடர்ந்தாலும், ‘மூர்க்கனும் முதலையும் கொண்டதை விடா’ என்ற பழமொழிக்கொப்ப ‘நீட்’ தேர்வில் எவ்வளவு ஆள் மாறாட்ட மோசடி, ஊழல், கேள்வித் தாள் குளறுபடிகள் இருந்தபோதிலும், உயர்நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டிய நிலையிலும், வீண் வறட்டுப் பிடிவாதத் தினால், ஏழை, எளிய நடுத்தர குடும்ப மாணவர்கள் டாக்டர்களாவதற்கு ‘நீட்’ தேர்வு முறை, ‘நெக்ஸ்ட்’ (Next) தேர்வு முறை போன்ற பன்னாடை வடிகட்டல் முறை மூலம் தடுக்கவே செய்கிறது!

தமிழ்நாடு சட்டமன்றத்தின் ‘நீட்’ ஒழிப்பு மசோதா டில்லியில் தூங்குகிறதே!

கார்ப்பரேட் முதலாளிகளின் மருத்துவக் கல்வியை பெரும் வியாபாரச் சந்தையாக்கிட பல வழிமுறை ஓட்டைகள் அதில் உள்ளன என்பதை எவரே மறுக்க முடியும்?

அதனை உணர்ந்து தமிழ்நாடு அரசு முறைப்படி தனி வரைவு மசோதாவினை சட்டமன்றத்தில் நிறைவேற்றி, பல ஆண்டுகள் ஓடியும், குடியரசுத் தலைவர் அலுவல கத்தில் அம்மசோதா கிடப்பில் கிடக்கிறது! முன்பு ஆளுநரின் ஊறுகாய் ஜாடியில் ஊறி, இரண்டாவது முறை நிறைவேற்றப்பட்டு – வெகுமக்கள் அறப்போர், கண்டனக் கணைகளுக்குப் பின்பே, அதில் தபால்காரர் வேலை மட்டும் பார்க்க வேண்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அனாவசியமாய் அதனை அனுப்பாது இருந்தது முன்பு; இப்போதும் கிடப்பில் டில்லியில் கிடக்கிறது!

மக்களாட்சியின் மாண்புக்கு இது ‘பங்கம்’ அல்லவா?

இந்நிலையில், மருத்துவக் கல்லூரி கலந்தாய்வினை மாநில அரசு – இங்கே தமிழ்நாடு அரசு நடத்திடும் நிலையில், அதற்குப் பதில் அனைத்திந்திய அளவில் அகலக் கதவுத் திறந்து நாங்களே நடத்துவோம் என்று சொல்லி, நமது அரசமைப்புச் சட்டத்தின் 7 ஆவது அட்டவணையில் உள்ள மாநில அரசுப் பட்டியல் (State List) – அதில் உள்ள ஒத்திசைவு (Concurrent List) பட்டியலில் (மாநிலப் பட்டியல் – அதிகாரம் 6, ஒத் திசைவுப் பட்டியல் – அதிகாரம் 25) உள்ளவற்றிற்கு எதிரானதல்லவா?

தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பின் விளைவு!

நமது தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகமும் இதனைக் கடுமையாக எதிர்த்ததன் விளைவாக, புற்றிலிருந்து ‘நல்ல’ பாம்பு மீண்டும் இவ்வாண்டுக்குத் தன் தலையை உள்ளே இழுத்துள்ளது!

நாளை வராது என்பதற்கு என்ன நிச்சயம்?

தத்துவ ரீதியாக இதனை ஏற்க முடியாது என்பதை வலியுறுத்தி நமது மாணவர்களின் அனைத்து அமைப்பு களும் தமது எதிர்ப்பைக் காட்ட வரும் 16 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தை  நடத்துவதில் இந்தக் கோரிக்கையும் வற்புறுத்தப்படும் என்பது மிகவும் சுட்டிக்காட்டப்பட வேண்டியது!

அதுமட்டுமல்ல, மத்திய தொகுப்புக்கு நாம் ஆண்டுக்கு ஆண்டு தரும் மாநில இடங்களை – தரவேண்டிய அளவுபற்றி நமது தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய முன்வந்து – அதற்கான தனி சட்டப் போராட்டத்தினை உச்சநீதிமன்றத்தில் நடத்திட முன்வரவேண்டும்.


நம் உரிமைகள் நாளும் பறிபோவதை 

அனுமதிக்க முடியாது!

அரசமைப்புச் சட்டத்தின் 142(1) ஆவது பிரிவின்கீழ் முன்பு உச்சநீதிமன்றம், மற்ற மாநிலங்களில் உ.பி., போன்றவற்றில் போதிய மருத்துவக் கல்லூரிகள் இல்லாதபோது கொடுக்க உத்தரவிட்டது தொடர்ந்து வருவது அநியாயம் ஆகும். மத்திய தொகுப்புக்கு மாநில இடங்கள் என்பது – வளர்ச்சியடைந்த மாநிலங்களுக்குத் தண்டனை தருவதுபோன்றதே அந்த ஒரு தற்காலிக உத்தரவு – அதையே நிரந்தரமாக்கலாமா?

அம்மாநிலங்கள் வளர்ந்துவிட்ட பிறகு நமது ஊட்ட உணவு அவர்களுக்குத் தேவையில்லை என்பதை சட்டப்பூர்வமாகவே நம்மால் வாதாடி வெற்றி பெற வாய்ப்புகள் உண்டு.

‘‘அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே” என்ற  பழமொழியை மாற்றி, ‘‘என் வீட்டு நெய்யே, அண்டை வீட்டு அம்மையின் வாயே” என்று பறித்திடும் நிலைக்கும் முற்றுப்புள்ளி வைக்க முன்வர வேண்டும்.

நம் உரிமைகளும் நாளும் பறிபோவதை சகித்துக் கொண்டிருக்க முடியாது! 

ஓங்கிக் குரல்கள் ஒலிக்கட்டும்!!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

13.6.2023

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *