ராஜபாளையம், ஜூன் 14 – ‘அமித்ஷா சொன்னது அனைத்தும் பொய்’ என்று சிபி.அய். மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் நேற்று (13.6.2023) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அமித்ஷா பேசும்போது காமராஜர், மூப்பனார் ஆகியோர் பிரதமராக வர இருந்த வாய்ப்பை தி.மு.க. தடுத்து நிறுத்தி விட்டதாக கூறியிருக்கிறார். ஆனால் காமராஜர் பிரதமராவதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. நேருவின் மறைவுக்குப் பிறகு லால்பகதூர் சாஸ்திரியும், அதன்பின் இந்திரா காந்தியும் பிரதமராக வருவதற்கு காமராஜர்தான் முழு பொறுப்பேற்றுக்கொண்டார். அதே போல மூப்பனாரும் பிரதமராவதற்கு விருப்பம் தெரிவிக்க வில்லை. மாற்று அணியை உருவாக்குவதற்கே கவனம் செலுத்தினார். பிரதமராக அவருக்கு வாய்ப்பு இருந்தும் ஆர்வம் காட்டவில்லை. அவருக்கு இருந்த வாய்ப்பை தி.மு.க.வும் தடுக்கவில்லை.
கலைஞரை, குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வலியுறுத்தியபோதும் அவர் அதை மறுத்துவிட்டார். உண்மை இவ்வாறு இருக்கும் நிலையில் அமித்ஷா தவறான தகவல்களை, பொய்யான தகவல்களை தமிழ் நாட்டில் கட்டவிழ்த்து விட்டு சென்றிருக்கிறார். வருங் காலத்தில் தமிழர் பிரதமராக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். ஆனால் அந்த வாய்ப்பு வரும் தேர்தலில் இல்லை. -இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஸ்மார்ட் காவலர் அலைபேசி செயலி ஆணையர் சங்கர்ஜிவால் வழங்கினார்