சென்னை, ஜூலை 24- தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 1,338 சமூக நீதி விடுதிகளில், ஒருங்கிணைந்த சமையல் அறை திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இந்த விடுதிகளில் 25,625 கல்லூரி மாணவர்கள் உட்பட மொத்தம் 77,219 மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். தற்போது, இங்கு படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு மாதம் 1,400 ரூபாயும், கல்லூரி மாணவர்களுக்கு மாதம் 1,500 ரூபாயும் உணவுப் படியாக வழங்கப்படுகிறது.
ஏற்கெனவே, தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதிகளில், சென்னையில் ஒருங்கிணைந்த சமையல் அறையில் உணவு சமைக்கப்பட்டு, அனைத்து விடுதிகளுக்கும் விநியோகிக் கப்படுகிறது. அதேபோன்று, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளிலும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அரசு முன்வந்துள்ளது.
முதல் கட்டமாக, சென்னையில் உள்ள 13 விடுதிகளிலும், திருச்சி மாவட்டத்தில் உள்ள 17 விடுதிகளிலும் இத்திட்டத்தைச் செயல்படுத்த அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் உள்ள விடுதிகளில் செயல்படுத்தப்படுவதைப் போல, 7 கிலோமீட்டருக்கு ஒரு பொது சமையல் அறை அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் மாணவர்களுக்கு தரமான மற்றும் சுகாதாரமான உணவை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.