டில்லி பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக தமிழுக்கானப் பாடப்பிரிவுகள் உள்ளன. இங்கு தமிழ் மொழியில் இளங்கலை, முதுகலை மற்றும் பட்டயப் படிப்புக்கான கல்வி போதிக்கப் படுகிறது. இதற்கான 5-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பேராசிரியர்கள் ஓய்வுபெற்ற பிறகும் அப்பணி யிடங்கள் 10 ஆண்டுகளாக காலியாக இருந்தன. கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர்
20-இல் வெளியான செய்திக்குப் பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்பட பலரும், ஒன்றிய கல்வி அமைச்சருக்கும், டில்லி பல்கலைக்கழகத் துணை வேந்தருக்கும் கடிதம் எழுதினர்.
அதன்பின் தமிழ்ப் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவும் முறையாக செயல்படாமல் உள்ளது. இதற்கிடையில், ஒரு உதவிப் பேராசிரியர் பணி பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், விண்ணப்பம் அளித்த 14 பேரில் ஒருவருக்கு மட்டும் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், 2 இணைப் பேராசிரியர் பணிக்கான விண்ணப்பதாரர்களுக்கு இன்னும் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு அனுப்பப்படவில்லை.
ஊடகம் ஒன்றுக்கு டில்லி பல்கலைக்கழக நிர்வாக வட்டாரங்கள் கூறும்போது, “தமிழுக்கான ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் குறைவாகச் சேருகின்றனர். அதைக் காரணம் காட்டி 2 இணைப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், கடந்த வாரம் டில்லி பல்கலைக் கழகத்தின் திறந்த வெளிப் பள்ளிக்கு பேராசிரியர்களை நியமிக்கும் அறிவிப்பு வெளியானது. அதில் தமிழுக்கானப் பணியிடம் இடம் பெறவில்லை. இங்கு கடைசியாக பணியாற்றிய உதவிப் பேராசிரியர் மாணிக்க வாசகம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்றார். இதனால் அவரது இடமும் காலியாக உள்ளது.
புதிய கல்விக் கொள்கையில் அறிமுகமாகி உள்ள 4 ஆண்டு பட்டப் படிப்பில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் ஏதாவது ஒரு மொழியை பயில்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டில் 4 ஆண்டுப் பட்டப்படிப்பின் முதலாண்டு மாணவர்களுக்கு மொழிப் பாடமாகத் தமிழ் இருந்தது. எனினும், இந்த மாணவர்களுக்கான வகுப்புகளை அனை வரையும் ஒரே அறையில் உட்கார வைத்து பகுதி நேர தமிழ்ப் பேராசிரியர்களைக் கொண்டு சமாளிப்பதாக புகார் உள்ளது. மோடி மேடைதோறும் தமிழ் தமிழ் என்று பேசி வருகிறார். ஆனால் நடைமுறையிலோ தமிழைத் தவிர்க்கும் வகையில் அவருக்கு கீழ்வரும் துறைகளின் நிலை உள்ளது.
தமிழ்நாட்டுக்கு வந்தால் திருக்குறளை திக்கித் திணறி ஏதோ சொல்லுவார். உலகில் தலை சிறந்த மொழி என்று தேனொழுகப் பேசுவார்.
திருவள்ளுவர் சிலையை அரித்துவாரில் வைக்கப் போகிறேன் என்று பிஜேபி மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் கோயல் பெரிய அளவு விளம்பர வண்ண வண்ண மத்தாப்புகளைக் காட்டி எடுத்துச் சென்றாரே, அந்த சிலையை அங்கு வைக்க முடிந்ததா? எந்தக் குப்பை மேட்டில் அது கிடக்கிறதோ! தமிழைப் பற்றி ‘அப்படி இப்படி’ என்று புகழ்ந்து தள்ளும் மோடி, இதன்மீது எடுத்த நடவடிக்கை என்ன?
சமஸ்கிருதத்துக்கு மட்டும் ரூ.640 கோடி – ஹிந்திக்கு ரூ.39 கோடி. ஆனால், தமிழ் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள ஏனைய மொழிகளுக்கு அளிக்கப்பட்ட நிதி வெறும் ரூ.53.61 கோடிதானே!
மற்ற மற்ற மாநிலங்களை வேண்டுமானால் ஏமாற்றலாம். தந்தை பெரியார் பிறந்த திராவிட மண்ணில் ‘சித்து’ விளையாட்டெல்லாம் பலிக்காது – பலிக்கவே பலிக்காது.