பழனிசாமியின் கூட்டணிக் கனவு அமைச்சர் கே.என்.நேரு கடும் விமர்சனம்

viduthalai
4 Min Read

சென்னை, ஜூலை 20- திமுக கூட்டணிக் கட்சிகளைப் பற்றிப் பேச எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இருக்கிறதா? என்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் பயணம் போய்க் கொண்டிருக்கும் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தினம் தினம் கேலிக் கூத்துகளை அரங்கேற்றி வெற்றுப் பரபரப்பை உருவககிக் கொண்டிருக்கிறார்.

தலைப்பை மாற்றுங்கள்

‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பைத் தயவு செய்து மாற்றிவிடுங்கள் பழனிசாமி அவர்களே! ‘சம்பந்தியை மீட்டோம்; சம்பாதித்த பணத்தைக் காப்போம்!’, ‘மக்களை மறப்போம்; தமிழ்நாட்டை விற்போம்!’, ‘மகனைக் காப்போம்; சம்பந்தியை மீட்போம்’ எனத் தலைப்பை மாற்றிக் கொண்டு பழனிசாமி பாஜக அடிமை பயணத்தைத் தொடங்கலாம்.

தேர்தலில் ஒரு நாடகத்தை…

பாஜக கூட்டணியை விட்டு விலகுவது போல 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு நாடகத்தை அரங்கேற்றி, கூட்டணிக் கட்சிகளை அதிமுகவில் சேர்க்க முயன்றார் பழனிசாமி. ஆனால், அது கைகூடவில்லை. அதன் பிறகு தொடர்ச்சியாக திமுக கூட்டணிக் கட்சிகளை அழைத்துக் கொண்டே இருந்தார். ஒரு கட்சிகூட அதிமுக அணியில் சேரவில்லை. ‘2026 தேர்தலில் பலமான கூட்டணியை அமைப்பேன்; வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது; தொண்டர்கள் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும்; பாஜக அல்லாத கட்சிகளுடன் கூட்டணி’ என்றெல்லாம் தொடர்ந்து பழனிசாமி உருட்டிக் கொண்டே இருந்தார். ‘நீ உருட்டுபா… உன் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதா நடக்கும்’ என பழனிசாமியை உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பை ரணகளம் ஆக்கியதுதான் மிச்சம்.

சரிந்து தொங்கியது!

கூட்டணியை உருவாக்கக் கூடிய பழனிசாமியின் ஆளுமைதான் சரிந்து தொங்கியது! ஆனால், அதிமுகவின் கூட்டணி கணக்கை டில்லியில் இருக்கும் பழனிசாமியின் முதலாளிகள் போட்டுக் கொண்டிருந்தார்கள். கடைசியில் கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்து, கூட்டணியை அறிவித்து விட்டுப் போனார். ஆனால், கூட்டணிக்குத் தலைமை தாங்குவதாகத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டிருக்கும் பழனிசாமி நாட்டாமை படத்தில் கவுண்டமணிக்கு பெண் பார்க்கும் காட்சியில் ஒருவர் மிக்ஸர் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் போல அமித்ஷா பக்கத்தில் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தார்.

கூட்டணிக்கு ஆள் பிடித்து…

அதிமுக கூட்டணி அமைந்தாலும் அதனை ‘அதிமுக கூட்டணி’ என்று அதிமுகவினரைத் தவிர மற்றவர்கள் யாருமே சொல்வதில்லை. அதிமுக, பாஜக, தமாகா தவிர அந்தக் கூட்டணியில் வேறு யாருமே இல்லாததால், ‘மக்களை மறப்போம்; தமிழ்நாட்டை விற்போம்!’ பயணத்தில் கூட்டணிக்கு மீண்டும் ஆள் பிடிக்க இறங்கிவிட்டார் பழனிசாமி. ‘பிரமாதமான கட்சி எங்கள் கூட்டணிக்கு வரப் போகிறது’ என்று ஓயாது சொல்லிக் கொண்டிருக்கிறார். ரத்னக் கம்பளத்தைத் தூக்கிக் கொண்டு திரிகிறார்.

குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்

கோவை பயணத்தில், “கம்யூனிஸ்ட் கட்சி கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து கொண்டே செல்கிறது. தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறதா? இல்லையா? என்று முகவரி இல்லாமல் இருக்கிறது” என்று பேசியவர், சிதம்பரம் பயணத்தில், கூட்டணியில் சேர விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுக்கிறார். ‘எங்கள் கூட்டணியில் சேர்ந்தால் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம்’ என்கிறார். ‘கோவையில் பேசியவரும் சிதம்பரத்தில் பேசியவரும் ஒரே ஆளா?’ என்று வாக்காளர் மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

பாஜகவின் பாசிச ரத்தக் கம்பளம்

பழனிசாமி விரித்திருப்பது ரத்தினக் கம்பளம் அல்ல. பாஜகவின் பாசிச ரத்தக் கம்பளம் என்பதை திமுகவின் தோழமை கட்சிகளும் மக்களும் அறிவார்கள். அதனால்தான் பழனிசாமியின் அழைப்பைக் கம்யூனிஸ்ட்டுகளும் விடுதலைச் சிறுத்தைகளும் நிராகரித்திருக்கின்றன.

பாஜகவை விமர்சிக்காதது ஏன்?

திமுக கூட்டணிக் கட்சிகளை விமர்சிக்கும் பழனிசாமி, என்றைக்காவது பாஜகவை விமர்சித்திருக்கிறாரா? கூட்டணி ஆட்சி என்று மூச்சுக்கு முப்பது தடவை சொல்லிக் கொண்டிருக்கும் அமித்ஷாவிற்கு பதிலடி தர முடியாத கோழை பழனிசாமி திமுக கூட்டணிக் கட்சிகளைப் பற்றிப் பேச அருகதை இருக்கிறதா?

“அமித்ஷா வீட்டின் கதவைத் தட்டினால்தான் தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினை தீரும். அதனால் நாங்கள் அவர் வீட்டின் கதவைத் தட்டினோம்” என்று வெட்கமே இல்லாமல் சொல்கிறார் பழனிசாமி. அமித்ஷா வீட்டிற்குப் போவதாக இருந்தால் சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே! எதற்காக மக்கள் பிரச்னையை பேச கார்களில் மாறி மாறிப் போக வேண்டு? ‘டில்லி அதிமுக அலுவலகத்தைப் பார்க்க வந்தேன்’ என ஏன் பொய் சொல்ல வேண்டும்?

மக்களால் புறந்தள்ளப்பட்டார்

தோல்வி மேல் தோல்வியடைந்து வரும் பழனிசாமி 2026 சட்டமன்றத் தேர்தலிலும் படுதோல்வி அடைவார் என்பது உறுதியானதால்தான் பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி கூட்டணிக் கட்சிகளுக்கு ஆள் பிடிக்கத் தனது தனிப் பேருந்தில் பயணிக்கிறார். 2021 தேர்தலில் பழனிசாமியின் பச்சைப் பொய்களை நம்பாமல், புறந்தள்ளிய மக்கள், 2024 நாடாளுமன்றத் தேர்தலைப் போல 2026 தேர்தலிலும் பித்தலாட்ட பாஜக – அதிமுக கூட்டணியைப் புறக்கணித்து நம்பிக்கை நாயகனான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை மீண்டும் அரியணையில் ஏற்றுவார்கள். மக்களின் பேராதரவோடு திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடரும்” என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *